கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. ராஜேந்திர பாலாஜி மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது.


இந்த நிலையில், இந்த வழக்கிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிகார வரம்பையும் மீறி இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.





இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் ஏன் இத்தனை நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்தது? என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கை விசாரிக்க தடையும் விதித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.