ஆளுநர் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த விவாகரத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.


”அமைச்சர் ஆகியிருப்போம்”


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சில தினங்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ”தமிழ்நாட்டு மக்கள் திறமையானவர்களை அங்கீகரிப்பதில்லை. ஆனால் மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் காண்டு ஆளுநராக பணிசெய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள் எனத் தெரிவித்தார். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருப்போம் என சொல்லியிருந்தார். ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.


“ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது”


இதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல” என பதில் அளித்தார்.


”இறுமாப்பு வேண்டாம்”


மேலும், “தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.” என்று  கூறியுள்ளார். 


சு.வெங்கடேசன் பதில்


இந்நிலையில் மீண்டும், சு.வெங்கடேசன் பதில் கருத்து தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்துள்ளதாவது,






நான் டுடோரியலை  கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி, கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியிள்ளீர்கள்? இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.