இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 


கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக, கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் இலங்கை மக்கள் இந்த அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் திங்கள் கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


 






இதற்கும் எதிர்ப்பு வலுத்த நிலையில், போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் ஊரடங்கு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை ஆளும் அரசு முடக்கியுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, ராணுவத்தினர் 600க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.