ஒற்றை தலைமையாகி கிரீடம் சூட்ட ஓ.பி.எஸ்சுடன் இ.பிஎஸ் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க சைலண்டா ஆஹா வந்திடுச்சு... நம்ம நேரம் வந்திடுச்சுன்னு தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா. இனி சின்னம்மாதான் ஒற்றைத் தலைமை என்று அவரது விசுவாசிகள் புழுதி பறக்க அரசியல் களத்தை அதிரடிக்கின்றனர்.



தர்மயுத்தம் செய்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம். நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு இரட்டை தலைமை என்று நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒற்றைத் தலைமை என்ற கோஷம் உயர முட்டிக்க ஆரம்பித்து விட்டனர் ஓ.பி.எஸ்சும் - இ.பிஎஸ்சும்.

இதுதான் நம்ம நேரம். இதை மிஸ் செய்யக்கூடாது என்று நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா தனி அரசியல் ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது என்று குதூகலமாக உள்ளனர் அவரது விசுவாசிகள்.


 





சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஓர் அணியிலும் இருந்தனர். பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், இருவரும் இணைந்து இரட்டை இலைகளாக மாறினர். இதனால் சசிகலாவின் சகோதரரி மகன் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.


இதனால் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'அம்மா அணி' என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக மாற்றினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தினார். அவர் தனது கட்சிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்று அறிவித்தார்.


 




இந்நிலையில் இரட்டை இலைகளாக இருந்த இ.பி.எஸ் ஒற்றை இலையாக மாறி அதிமுகவை ஆள அரசியலில் அதகளம் செய்து வருகிறார். இதற்கிடையில் ஊரு இரண்டு பட்டால் என்ற கதையாக நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று "தில்"லாக பேட்டி கொடுத்த கையோடு சகோதரா என்று திவாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த, வந்தேன் சகோதரி என்று அவரும் தன் கட்சியை கலைத்து விட்டு  தாய் கழகத்தில் இணைய சம்மதம் தெரிவிக்க, வரும் 12ம் தேதி காலை தஞ்சையில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் அண்ணா திராவிடர் கழகத்தை தாய்கழகமான சசிகலா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தோடு இணைக்கிறார்.

இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் ஆஹா சிங்கம் களம் இறங்கிடுச்சு... இது சும்மா டிரெய்லர்தான்... இனிமேதானே இருக்கு ஆக்சன் பிக்சர். இனி அதிமுக என்றால் சின்னம்மாதான்... சின்னம்மா என்றால் அதிமுகதான். அவங்கதான் ஒற்றை தலைமை... பொதுச்செயலாளர் எல்லாம் என்று உற்சாகத்தோடு உலா வருகின்றனர். விரைவில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இணைப்பு விழா தகவலும் வரும் என்கிறார்கள் சசிகலா விசுவாசிகள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண