ஒரே மேடையில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பிரதிநிதிகள்; கோவையில் துளிர்க்கும் அரசியல் நாகரிகம்

கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரை கூட அழைக்கப்படவில்லை என்ற புகார்கள் இருந்து வந்தது.

Continues below advertisement

ஒரே மேடையில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பிரதிநிதிகள். முன்வரிசையில் முன்னாள் அமைச்சருக்கு இருக்கை - கோவையில் துளிர்க்கும் அரசியல் நாகரிகம்

Continues below advertisement

கோவை ஆவராம்பாளையம் சாலையில் உள்ள கோயமுத்தூர் தொழில்துறை கட்டமைப்பு சங்கத்தின் கூட்டரங்கில்  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக  அதிகாரிகளும், சக அமைச்சர்களும் கூட மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று 11 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 11.15 மணியளவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகை தந்தார். திமுக அமைச்சர்கள் வருகை தர தாமதம் ஏற்பட்டதால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்தார்.

இதனிடையே மேடையில் அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. திடீரென அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டன. சுமார் 12 மணியளவில் அமைச்சர்கள் வந்ததும் கூட்டம் துவங்கியது. அப்போது ஆளுங்கட்சி அமைச்சர்களும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இதுவரை கோவையில் இது காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது. அதைவிட அனைவரும்  ஆச்சரியப்படும் வகையில் முன்வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இடம் வழங்கப்பட்டது. முன்வரிசையில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி, கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், "எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்று இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண எதிர்கட்சியினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும் போது, "இரண்டாவது அலை தொற்று கடுமையாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளை குறைக்க கூடாது. அவ்வாறு செய்தால் நிலைமை மோசமாகும். படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன், உடல்கள் எரியூட்டுதல் ஆகிய வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு தருவோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் துறையினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் கூடுதலாக பெற மத்திய அரசிடம் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் கோவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15 ம் தேதி முதல் கொரோனா நிவாரணம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பாதுகாக்க வேண்டும். கொரோனாவை எநிர்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன் பேசி ரெம்டெசிவிர் அதிகரிக்கப்படும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட முதலீட்டு மானியம் 250 கோடியில், 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும். ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு  திமுக சட்டமன்ற உறுப்பினரை கூட அழைக்கப்படவில்லை என்ற புகார்கள் இருந்து வந்தது. இதனை கண்டித்து சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.கார்த்திக் போராட்டங்களிலும் ஈடுபட்டார். திமுக ஆட்சியில் கோவையில் அமைச்சர்கள் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலே ஒரே மேடையில் ஆளுங்கட்சி, எதிர் கட்சி பேதம் இல்லாமல் பங்கேற்றதும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு முன்வரிசையில் இடம் அளித்ததும் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஆட்சி மாறியதும், காட்சிகளும் மாறியுள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola