ஒரு மாநில அரசு எடுத்த முடிவை செயல்படுத்துவதுதான் ஆளுநரின் கடமையே தவிர, தன் இச்சையாக செயல்பட ஆளுநருக்கு உரிமை கிடையாது; ஆளுநர் சட்டக் கடமையைச் செய்யத் தவறியதால் அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத்துக்குரிய தனித்த அதிகாரம் அளிக்கும் 142 சரத்தின்படி பேரறிவாளனை விடுவித்துள்ளது. சட்ட நெறி தவறிய தமிழ்நாடு ஆளுநர் பதவி நீடிப்பது சரியா என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை” என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போன்ற ஒரு தவறான நீதி- முன்பு - பேரறிவாளன் வாழ்வில் ஏற்பட்டது. 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் அதுபற்றி பலரும் மறந்திருக்கக் கூடும்.


ராஜீவ்காந்தி படுகொலை நியாயப்படுத்தப்பட முடியாததே!

 

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை என்பது எப்போதும் - நியாயப்படுத்த முடியாத - மனித நேயமற்ற கொடுஞ்செயல் என்பதும், கண்டனத்திற்குரியது என்பதும் துவக்கத்திலிருந்தே நமது உறுதியான கருத்தாகும். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - நிரபராதிகளானவர்களை திட்டமிட்டு அன்றைய தடா விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்க வைத்து தூக்கு தண்டனை வாங்கி கொடுத்து, அது பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, பேரறிவாளன் விடுதலையை அதே உச்சநீதிமன்றம் தனக்குள்ள வாய்ப்பின் (இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 142 (Article 142) படி விடுதலை செய்து வரலாற்றுப் புகழ் வாய்ந்த மனித உரிமைக் காப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதனை மிகுந்த சட்டத் தெளிவுடன் தீர்ப்பு எழுதி வழங்கிய மூன்று முக்கிய நீதிபதிகளான எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியயோரைப் பாராட்டுகிறோம். வாழ்த்தும் உலகத்தோடு நம்மையும் இணைத்துக் கொள்ளுகிறோம்.

உச்சநீதிமன்ற நீதிபதியும், கண்காணிப்பு அதிகாரியும் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம் என்ன?  


தடா காவல் அதிகாரியாக இருந்த கண்காணிப்பாளர் (S.P.) தியாகராஜன் ஓய்வு பெற்ற பின் (இன்று அவர் இல்லையே என்பது நமது ஆதங்கம்) இந்த வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலம் தாங்கள் பதிவு செய்துகொண்ட வாக்குமூலம்தான் என்பதை உறுத்திய மனச்சாட்சி காரணமாக அவர் வெளியிட்டது ஏடுகளில் வெளியாயிற்று. அது போலவே இராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், அந்த வழக்கு விசாரணை முறையாக நடபெறாமல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது என்ற கருத்தை பின்னாளில் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்!

குற்றவாளிகள் விடுதலை செய்யப்படலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் குற்றவியல் சட்டத்தின் நிலைப்பாடு


“கிரிமினல் சட்டத்தின் அடிப்படையே பத்து குற்றவாளிகள்கூட விடுதலை செய்யப்படலாம்; ஆனால் ஒரு குற்றமற்ற நிராபராதி (Not Guilty Innocent person) தண்டிக்கப்படக் கூடாது - கூடவே கூடாது என்பதுதான்! இந்த வழக்கின் தீர்ப்பு, மனித உரிமை களைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை முறையாக விளக்கப் படுத்துவதற்கும் உகந்ததாக அமைந்து உள்ளதோடு, ஆளுநர் மற்றும் அவரை இயக்கும் அதிகார வர்க்கம் ஆகியோர் அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பான வகையில் மட்டுமல்ல; (Not only Unconstitutional but also anti-Constitutional) அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அணுகுமுறை என்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததுபற்றிய அவலத்தையும் வெளியாக்கும் ஒரு கலங்கரை வெளிச்சத் தீர்ப்பும் ஆகும் .

தமிழ்நாட்டு ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையே!


பேரறிவாளன் என்ற தனிநபர் அல்லது அவருடன் உள்ள மற்ற அறுவர் (அவர்களையும் விடுதலை  செய்ய வேண்டுமென்றுதான் தமிழ்நாடு அமைச்சரவை  தீர்மானம் கூறியுள்ளது) என்ற சில தனி நபர்களின் விடுதலை-  பறிக்கப்பட்ட மனிதஉரிமை மீண்டும் திரும்பப் பெறல் என்பதையே தாண்டிய, அரசமைப்புச் சட்டத்திற்குச் சரியான சட்ட வியாக்கியானம் ஆகும். அரசமைப்புச் சட்டநெறி தவறிய பிழை செய்தோரை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்தி - அரசமைப்புச் சட்ட வரைமுறைக்குள்ளே நின்று - மாநிலங்களின் உரிமை, ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்ற பதவியில் உள்ளோருக்கு இதில் தனித்த சிந்தனைக்கு இடமளிக்கவோ, செயல்படவோ இடமில்லை என்ற திட்டவட்டமாகவே கூறும் வகையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது! தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆளுநரின் அரசியல் சட்ட விரோத நடவடிக்கை இதில் ‘பளிச்‘ சென்று திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு தவறைச் சரி கட்ட ஒன்பது தவறுகளைச் செய்யலாமா?


29 பக்கங்களைக் கொண்ட உச்சநீதிமன்ற மூவர் நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பினை நாம் ஒருமுறை அல்ல, பல முறை வாசித்தோம். அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை வளைக்க நினைத்த ஒன்றிய அரசின் வாதங்களை ஏற்காமல், அவற்றைப் புறந்தள்ளியுள்ளதோடு, விசாரணையின் போதே ஆணி அடித்தது போல பல கேள்விகளை ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர்களை நோக்கி எழுப்பியதன் மூலம் எவருக்கும் சட்ட விளக்கம் ‘பளிச்‘ சென்று விளங்கும் வண்ணம் அமைந்திருப்பதை முன்பே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்!


ஒரு தவறைச் சரிகட்ட ஒன்பது தவறுகளை செய்தல் - என்ற சொலவடைக்கு ஒப்ப, அமைச்சரவை முடிவினை செயல்படுத்த ஏன் தாமதம் என்பதற்கு விசித்திர விளக்கங்கள் தந்து, திசை திருப்பிய நடத்தைகளைப்பற்றியும் இத்தீர்ப்பு பதிவு செய்துள்ளது.

பொது மன்னிப்பை வழங்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ கிடையாது


இராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் அமைப்பு அதனை முடிக்கவில்லை என்ற சாக்கு கூறப்பட்டது. அதை சி.பி.அய். அறிக்கை மறுத்ததையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். அதோடு “தமிழ்நாடு ஆளுநருக்காக ஒன்றிய அரசு வழக்குரைஞர் வாதாடும் உரிமையை எப்படி பெற்றுள்ளார்” என்றும் கேட்டனர். அதோடு, பொது மன்னிப்பு வழங்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என்ற அரசமைப்புச் சட்டம் கூறாத ஒரு வாதத்தை முன் வைத்தபோது, அப்படியானால் இதற்கு முன் ஆளுநர்கள்மூலம் - அமைச்சரவையால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, விடுதலைகள் அனைத்தும் செல்லத்தக்கவைகளா? செல்லத்தகாதவைகளா? என்று பின்னி பின்னி கேள்விகளையெல்லாம் கேட்ட பிறகு தான் அரசமைப்புச் சட்டவிதி 161 (Article161) தான் இறுதியானது என்ற விளக்கத்தை அதில் சரியான நீதி கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருதினால் தலையிட்டு தவறிய நீதியை வழங்க உரிமை பெற்றுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியதோடு,

ஆளுநர் மூலம் ஆட்சி நடத்த முடியுமா?


நமது அரசமைப்புச் சட்டமுறை முழுவதும் இங்கிலாந்து நாட்டின் கேபினட் முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இங்கே குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அதிகார அமைப்புகளின் தலைவர்களே தவிர, தனி அதிகாரம் அவர்களுக்கு - அமைச்சரவை முடிவைமீறி ஏதும் கிடையாது எனத் திட்டவட்டமாக இத்தீர்ப்பில் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் அரசியல் செய்ய நினைத்தால் அது அரசியல் பிழை - அதற்கு அறங்கூற்றமாகும் என்பது இந்தத் தீர்ப்பின்மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று (18.5.2022) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:


தீர்ப்பின் பாரா 29 அருமையான சுருக்கத் தீர்ப்பினை   விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. “29. இறுதியாக எங்கள் முடிவுகளை கீழே தொகுத்துள்ளோம்:

 

(அ) அரசமப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிலையில், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என்று இந்த நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளினால் வகுக்கப்பட்ட சட்டங்கள் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

(ஆ) குறிப்பாக மாநில அமைச்சரவை கைதியை விடுவிக்க முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைகளை வழங்கியதற்குப் பின்னர்,  சட்டப்பிரிவு 161-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாதது அல்லது கைதிக்குக் கூறப்படாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதம் ஆகியவை இந்த நீதிமன்றத்தின் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாகும்.

(இ) அப்படிப் பரிந்துரை செய்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையைப் பற்றி ஆளுநர் குறிப்பிடுவதற்கு எந்தவிதமான அரசியல் சாசன ஆதாரமும் இல்லாதது; நமது அரசமைப்புச் சட்டத்தின் திட்டத்துக்கு விரோதமானது. இதன் மூலம் “ஆளுநர் என்பது மாநில அரசின் சுருக்கெழுத்து வெளிப்பாடு” என இந்த நீதிமன்றம் கருதுகிறது.

அரசமைப்புச் சட்டம் 302 என்பது மாநில அரசு செயல்படுத்தும் அதிகாரமாகும்


(ஈ) மாநில அமைச்சரவை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது அல்லது மாநில அமைச்சரவை பொருத்தமற்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுத்தது என்ற மத்திய பிரதேச சிறப்புக் காவல் ஸ்தாபனம் வழக்கின் தீர்ப்பின் விவரங்கள் இந்த வழக்கிற்குப் பொருந்தாது.

 

 (உ) இந்திய பீனல் கோடு பிரிவு 302 இன் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்யும் / மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்பது குறித்து சிறீஹரன் வழக்கில் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காரணமாகக் கூறப்படும் புரிதல் தவறானது.   ஏனெனில் அரசமைப்புச் சட்டம் அல்லது பிரிவு 302 தொடர்பாக நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் எந்தவொரு வெளிப்படையான நிர்வாக அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு வழங்கப்படவில்லை. அத்தகைய குறிப்பிட்ட ஒப்புதல் இல்லாத நிலையில், பட்டியல்III இன் நுழைவு 1-இன் கீழ் பிரிவு 302 உள்ளது என்று கருதினால், 302 பிரிவின்படி அது மாநிலம் செயல்படுத்தும் அதிகாரமாகும்.

சட்டப்பிரிவு 142இன் படியான உச்சநீதிமன்ற தீர்ப்பு

 

(ஊ) மேல்முறையீட்டாளரின் நீண்டகால சிறைவாசம், சிறையிலும், பரோலின் போதும் திருப்திகரமாக நடந்துகொண்டமை, அவரது மருத்துவப் பதிவுகள், அவரது கல்வித் தகுதிகள், சட்டப்பிரிவு 161-இன் கீழ் இரண்டரை ஆண்டுகளாக அவரது மனு நிலுவையில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு,  மாநில அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநரின் பரிசீலனைக்கு மாற்றுவது பொருத்தமானதாக நாங்கள் கருதவில்லை. அரசமைப்பின் 142ஆவது பிரிவின் கீழ் எங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1991-ஆம் ஆண்டு குற்ற எண். 329 தொடர்பாக மேல்முறையீட்டாளர் தண்டனையை அனுபவித்ததாகக் கருதப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். ஏற்கெனவே ஜாமீனில் இருக்கும் மேல்முறையீட்டாளர், உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார். அவரது ஜாமீன் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.”
என்று மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளுநர் பதவி விலகுவாரா?

 

நமது ‘திராவிட மாடல்’ முதல் அமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டதுபோல இது மாநில உரிமைகளைக் காக்கும் மாநில சுயாட்சிக்கான பீடிகை போன்றது என்றால் அது மிகையாகாது. அரசமைப்புச் சட்ட கூறு 159இன் படி பதவிப் பிரமாணம் எடுத்த தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் இந்த அரசமைப்புச் சட்டநெறி பிறழ்ந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியபின்பும் பதவியில் நீடிப்பது ஆன்மீகம் பேசும் அவருக்கு உரிய தார்மீகப் பொறுப்புக்கு உகந்ததா? அவரது மனச்சாட்சி பதில் அளிக்குமா?”  எனக்  கேள்வி எழுப்பியுள்ளார்.