Just In





Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
Rahul Gandhi - Train Accident: மத்திய அரசு விழித்துக் கொள்ள, இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
சரக்கு ரயிலை மோதிய பயணிகள் ரயில்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே சென்ற போது, தடம் மாறி முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது.
பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் மோதியதால், இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குகளை ஏற்றிச் செல்லும் முதல் பெட்டி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் எந்தவித உயிர் இழப்புகளும் ஏற்படவில்லை என இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் ரயிலில் பயணித்த ஒருவர் கால் எலும்பு முறிவு மற்றும் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
விசாரணை:
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். மேலும், விபத்து தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி கண்டனம்:
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ,மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது “
இதுபோன்ற விபத்தானது பலமுறை நிகழ்ந்துள்ளது, பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும், மத்திய அரசானது பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள, இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.