புதுச்சேரியில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க நாங்கள்  ஏற்க மாட்டோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பாராதிய ஜனதா கட்சி, அதே முறையை மகாராஷ்டிராவில் செய்கிறது. சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளன. கட்சி மாறிகளால் தான் இந்திய அரசியல் தூய்மை இழந்துள்ளது. கடந்த ஓராண்டில் 35 மத்திய அமைச்சர் புதுச்சேரிக்கு வந்துள்ளார்கள். அவர்களால் புதுச்சேரிக்கு ஒரு பைசா கொண்டு வர முடிந்ததா? குடுகுடுப்பைக் காரனை போல் புதுச்சேரிக்கு நல்ல காலம் பிறப்பதாக ஆளுநர் தமிழிசை கூறுகிறார். எங்கே நல்ல காலம் வருகிறது. நான் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 10 சதவீதம் நிதியை பெற்றேன். ஆனால், ரங்கசாமியால் கூடுதலாக 1.56 சதவீதம் நிதி தான் பெற முடிந்துள்ளது.




மத்தியிலும், மாநிலத்திலும் சீர் கெட்ட நிர்வாகம் நடக்கிறது. ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது. புதுச்சேரியில் நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. பட்டா மாற்றும் அதிகாரம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமை படுத்தி கொடுக்கும் அதிகாரம் என்று 4 சட்டங்கள் அமலில் உள்ளன.




புதுச்சேரியில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல்படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆளுநருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு எல்லை அருகே  உள்ள சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது. முதலமைச்சர் தனது அதிகாரத்தை ஆளுநரிடம்  விட்டு கொடுத்துவிட்டார்.


ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும் இருப்பதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. புதுச்சேரியில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம். புதுச்சேரி மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண