தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்கள் அளித்ததாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய இரண்டு பேர் மீதும் தனித்தனியாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி செட்டிபட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மிலானி கொடுத்த புகாரின் பேரில்,  நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
வழக்கில் புகார்தாரர் மிலானி, ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவி எம்.பி சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்கள் அளித்ததாக கூறி அதற்கு பல ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் உண்மை தன்மை குறித்தும், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோர் பிரமாண பத்திரங்களில் தாக்கல் செய்த சொத்து விவரங்களின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து குற்றப்பிரிவு  காவல் துறையினர் கூறுகையில் "பிரமாண பத்திரங்களில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் புகார்தாரர் கொடுத்த ஆவணங்களில் உள்ள சொத்து விவரங்கள் குறித்த உண்மை தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 
 
 
இதற்காக தொடர்புடைய பத்திரப்பதிவு அலுவலகங்கள், சில நிறுவனங்களிடம் ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோரின் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை கேட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு, விவரங்கள் சேகரித்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால்  நீதிமன்ற விசாரணைக்காக மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்கப்படும்" என்கின்றனர்.
 
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்