மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 




தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆதீனம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், சனாதானத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. சனாதானத்தை ஒழிப்பதற்கு மாநாடு என்று சொல்கிறார்கள். 




ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. கொசுவை ஒழித்து விட்டோம் டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், விலைவாசி உயர்வு, டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். 




இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளில் முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்கள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை. தேர்தலுக்காக உடனே சனாதனம் என்று சொல்கிறார்கள் இதனால் நமக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதானம் என்ற வார்த்தையை சொல்லி பிரித்தாலும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதை செய்கிறார். 




இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ஆனால், பழைய அரசியலை கையில் எடுக்கிறார். நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண்துடைப்பு தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி பத்து நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன பலன் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, பிரித்தாலும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயல்” என்று கூறினார். 




தொடர்ந்து பேசிய அவர், “பாராளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை உதயநிதி பட்டியலிடுகிறார். கணவன் இறந்தால் யார் இன்று உடன்கட்டை ஏறுகிறார்கள்? மொட்டை அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் சனாதனம் என்று அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு உதாரணத்தை அவர்களால் காண்பிக்க முடியுமா? எதுவுமே இல்லாததை சொல்கிறார்கள். இன்று நாம் சந்திராயன், ஆதித்யா எல் ஒன்றை நிலவுக்கும், சூரியனுக்கும் அனுப்பி கொண்டு உள்ளோம்.




தற்கால அரசியலைப் பேச வேண்டிய உதயநிதி நூற்றாண்டு காலத்திற்கு பின்னோக்கி உள்ளார். இதனால் உதயநிதி மக்களின் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளார். மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது எனவும் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும்” தெரிவித்தார்.