உத்தரபிரதேசத்தில் சமூக ஆர்வலர் ஜாவத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியதற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய தூதரகங்களுக்கு சம்மன் அனுப்பின. இந்த நிலையில், நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, நுபுர் சர்மாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. உத்தரப்பிரதேசத்தில் ப்ரயாக்ராஜ் உள்பட ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதோடு, கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 227 பேர் கைது செய்யப்பட்டனர்.


சிறார்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறி வன்முறையாளர்கள் மீது 29 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, பிரயாக்ராஜில் நடந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஜாவத்  அகமது என்பவரை காவல்துறை கைது செய்தது. இதனையடுத்து பிரயாக்ராஜில்  உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது.






உத்தரப்பிரதேச அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஜவஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த. குடும்பத்தினரின் வீடு இடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சட்டத்தின் சரியான செயல்முறை ஜனநாயகத்திற்கு அடிப்படை. எந்தச் சட்டத்தின் கீழ் & எந்தச் செயல்முறையைப் பின்பற்றி இது செய்யப்பட்டது? உ.பி., இந்திய அரசியலமைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.