பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சிக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில்  தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளித்த காகா கலேல்கர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை குறித்த விஷயத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில், “சமூகநீதியின் முதலும் தெரியாமல், முடிவும்  தெரியாமல் காங்கிரஸ் செய்துள்ள இந்த செயல் அரைவேக்காட்டுத்தனமானது; கண்டிக்கத்தக்கது.


பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்த கலேல்கர் அறிக்கையை ஜவகர்லால் நேரு குப்பையில் வீசியதாக மருத்துவர் அய்யா அவர்கள் உரையாற்றிய சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்ற நாள் அக்டோபர் 26. அதன்பின் 25 நாட்களாக அது குறித்து வாயே திறக்காத காங்கிரஸ் கட்சி, இப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடுமையாக வலியுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால், அக்கட்சி யாருடையாக குரலாக ஒலிக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.


சமூகநீதி வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு இருண்ட பக்கங்களும் உள்ளன; ஒளிரும் பக்கங்களும்  உள்ளன. கலேல்கர் ஆணைய அறிக்கை, மண்டல் ஆணைய அறிக்கை ஆகியவற்றை செயல்படுத்துதல், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதாக அறிவித்து விட்டு, அதை சாதி, சமூக, பொருளாதார கணக்கெடுப்பாக நடத்தியதுடன், அது குறித்த விவரங்களையும் வெளியிடாமல் முடக்கியது ஆகியவை இருண்ட பக்கங்கள்.


அதே நேரத்தில், 2006-ஆம் ஆண்டில் மருத்துவர் அய்யா அவர்களின் தொடர் வலியுறுத்தலை ஏற்று,  அதிகாரம் படைத்த சில மத்திய அமைச்சர்களின்  எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களே தலையிட்டு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது.


காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று செல்லுமிடமெல்லாம் இராகுல் காந்தி அவர்கள் உறுதியளித்து வருவது ஆகியவை சமூகநீதி வரலாற்றில் காங்கிரஸ்  கட்சியின் ஒளிரும் பக்கங்கள். ஒளிரும் பக்கங்கள் குறித்து பாராட்டும் போது அதை ரசிக்கும் காங்கிரஸ் கட்சி, இருண்ட பக்கங்கள் குறித்து விமர்சிக்கும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், அலறுவது எந்த வகையில் நியாயம். காங்கிரசுக்கு பக்குவம் வேண்டும்.


கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை, நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் குப்பையில் வீசியது ஒரு பக்கம் இருக்கட்டும்... ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்கான காகா கலேல்கர் தலைமையிலான முதலாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்கவே நேரு அவர்கள் விரும்பவில்லை என்பது தான் வரலாற்று உண்மை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போது, அதில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 341-ஆம் பிரிவின்படி பட்டியலினத்தவர்களும், 342-ஆம் பிரிவின்படி பழங்குடியினரும் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார்? என்பது அடையாளம் காணப்படவில்லை. அதற்காக 1950-ஆம்  ஆண்டிலேயே 340-ஆம் பிரிவின்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால், அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளாகியும் அந்த ஆணையம் அமைக்கப்படாததை கண்டித்து தான் 1951 செப்டம்பரில் அம்பேத்கர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து தான் 1953-ஆம் ஆண்டு ஜனவரியில் கலேல்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதை நெருக்கடி காரணமாகவே நேரு அமைத்தார், விரும்பி அமைக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. தமிழக காங்கிரஸ் தலைவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும் என்பது தெரியவில்லை.


கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை நேரு அவர்கள் குப்பையில் வீசினார் என்பதற்கு ஆதாரங்கள்  உண்டா? என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அய்யோ, பாவம்... அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. காகா கலேல்கர் தலைமையிலான ஆணையத்தில் மொத்தம்  10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் முதன்மையானவர் சிவ்தயாள்சிங் சவுராசியா.  ஆணையத்தின் அறிக்கையை நேரு அவர்களிடம் தாக்கல் செய்ய கலேல்கருடன் நேரில் சென்றவர் சவுராசியா. ஆணைய அறிக்கையை நேரு குப்பையில் வீசியதை அம்பலப்படுத்தியவர் அவர் தான்.


ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் என்ன நடந்தது? என்பதை சிவ்தயாள்சிங் சவுராசியாவுடன் நெருங்கி பழகியவரும், பெரியாரின் பெருந்தொண்டருமான வே. ஆனைமுத்து அவர்கள் பல்வேறு ஆவணங்களில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்.. ‘‘கலேல்கர் தனது அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தார். அந்த அறிக்கையை நேரு தன் கையில் வாங்கியவுடனே ஒரு கேள்வி கேட்டார் கலேல்கரிடம்: ‘‘ நீங்கள் இந்த அறிக்கையில் ஏழை பிராமணர் வகுப்பு எதையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்கிறீர்களா? என்பது தான் அந்த கேள்வி. கலேல்கர் யோக்கியமான பிராமணர். அதனால், நேருவிடம், ‘‘இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம். அதனால் பிராமணர்களை சேர்க்கவில்லை. அது இந்த ஆணையத்தின் பணி வரம்புக்குள் வரவில்லை’’ கலேல்கர் கூறினார். இல்லை என்று கலேல்கர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரதமர் நேரு அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார்.


இந்த சம்பவம் 1955-ஆம் ஆண்டில் நடந்தது. அதை நீ நேரில் பார்த்தாயா? என்று கேட்பீர்கள். அந்த அறிக்கையை நேருவிடம் கொடுக்கும் போது கலேல்கருடன் சென்றவர் தயாள்சிங் சவுராசியா. அவர் அந்த ஆணையத்தின் உறுப்பினர். அவர்  1978-ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகம் ஆனார். உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு 07.05.1978-இல் முசாபர்நகர்  என்னும் ஊரில் நடந்தது.  வட இந்தியாவில் நான் முதன்முதலில் பேசியது அந்த மாநாட்டில் தான். அந்த மாநாட்டுக்கு தலைமையேற்று பேசியவர் தான் சிவ் தயாள்சிங் சவுராசியா. அவர் தான் இந்த சம்பவத்தை எனக்கு சொன்னார்’’ என்று  பெரியவர் ஆனைமுத்து பதிவு செய்திருக்கிறார். தமிழக காங்கிரஸ்  தலைவர்களுக்கு இந்த ஆதாரம் போதுமா?


மேற்கண்ட தரவுகள் எல்லாம் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய ‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’ என்ற தலைப்பிலான நூலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதையெல்லாம் படித்து, சமூகநீதி வரலாற்றை  புரிந்து கொள்ளாமலேயே, யாருடைய ஏவலுக்கோ பணிந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக காங்கிரஸ் மீது கோபம் வரவில்லை... பரிதாபம் தான் ஏற்படுகிறது.


தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வாதப்படியே, கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை அந்நாளைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவமதிக்கவில்லை என்றால், அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 40% வரையிலும்,  கல்வியில் 70% வரையிலும் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே? அதை ஏன் நேரு செய்யவில்லை?


கலேல்கர் ஆணைய அறிக்கை அது தாக்கல் செய்யப்பட்ட 1955-ஆம் ஆண்டிலேயே நிராகரிக்கப் பட்டு விட்டது. ஓர் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை நிராகரிக்கப்பட்டால், உடனடியாக  அடுத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டியது கட்டாயம். அதன்பின் 1964-ஆம் ஆண்டு வரை ஜவகர்லால் நேருவும், 1977-ஆம் ஆண்டு வரை  இந்திரா காந்தியும் தான் பிரதமர்களாக இருந்தனர். ஆனால், அந்த 12 ஆண்டுகளில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே அமைக்கப்படவில்லையே, அது ஏன்?  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு சமூகநீதி வழங்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி காட்டிய அக்கறை அவ்வளவு தானா?


தமிழ்நாட்டில் 1935-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டு வந்தது. இந்தியா விடுதலை அடைந்து முதல் பிரதமராக நேரு பதவியேற்ற ஆறாம் நாளிலேயே  அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை  பத்தாண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது, மண்டல் ஆணையத்தின் அறிக்கை குறித்து இராஜிவ் காந்தி அவர்கள் கூறிய கருத்துகள் என சமூகநீதி வரலாற்றில் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன.


அவை குறித்தெல்லாம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வகுப்பெடுக்க பா.ம.க. தயாராகவே உள்ளது; கற்றுக் கொள்ள தயாரா? என காங்கிரஸ் விளக்க வேண்டும். அதை விடுத்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூகநீதிக்காக போராடி வரும் மருத்துவர் அய்யா மீது அவதூறு பேச காங்கிரஸ் முயன்றால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.