Pawan Kalyan Political Life: ஆந்திர அரசியலின் இன்றைய சூப்பர் ஸ்டார், பத்து ஆண்டுகளாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மாஸாக அரியணை ஏறியவர், சந்திரபாபு வெற்றிக்கு வித்திட்டவர், மோடியிடம் பாராட்டு பெற்ற ஆந்திர துனை முதல்வர், பவர்ஸ்டார் பவன் கல்யாண்.


பவன் கல்யாண் அரசியல் பயணம்:


மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க முக்கிய பங்கு வகித்தது, ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேச கட்சி. ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் முக்கிய சக்தி பவன் கல்யாண். புயல் போல் களத்தில் இறங்கி ஆந்திராவை ஆட்டிப்படைத்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு குட்பை சொல்ல வைத்தவர்.


மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவர் ஸ்டார் பவன் கல்யாண்,  அண்ணன்  மூலமாக சினிமாவுக்கு வந்து சினிமாத்துறையில் மாபெரும் புகழை ஈட்டிய பவனுக்கு அரசியல் வாழ்க்கை ஒன்றும் அத்தனை எளிதானதாக அமையவில்லை..


2008 ஆம் ஆண்டு அண்ணன் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இளைஞர் அணி தலைவராக பவன் பொறுப்பேற்றார. ஆனால் கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன தம்பி என்ன என்பது போல், சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இனைக்க,  பவனுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையேயான மோதல் தொடங்கியது.


ஜன சேனா தொடக்கம்:




2014ல், அதாவது சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி ஆந்திர அரசியலில் களம் கண்ட பவன். பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளார். 2019 தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். கஜுவாகா, பீமாவரம் என்ற போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியுற்றார், ரஜோலு என்ற ஒரு இடத்தில் மட்டும் ஜனசேனா வெற்றி பெற்றது.


ஆனால் தோல்வியை கண்டு அவர் துவளவில்லை.பத்தாண்டுகளாக கற்றுக்கொண்ட வித்தைகளை ஒரே தேர்தலில் இறக்கி அரசியலில் இன்று மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ஜனவாணி என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.


சந்திரபாபு - பவன் சந்திப்பு


முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு தலைவலியாக மாறினார் பவன் கல்யாண்.  வழக்கு, கைது என அதிரடி காட்டிய YSR காங்கிரஸை எதிர்த்து முழக்கமிட்டார். 2023 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்படார். ஆந்திராவையே அதிர வைத்த இந்த கைது பவனையும் சீற வைத்தது. சந்திரபாபுவுக்கு ஆதரவாகவும் ஜெகனுக்கு எதிராகவும் குரல் கொடுத்த பவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.




இதைத்தொடர்ந்து சந்திரபாபுவை நேரில் சந்திக்க ராஜமுந்திரி சிறைக்கு சென்றார் பவன் கல்யாண். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுக்க. ராஜமுந்திரி சிறை வாசலில் அமர்ந்து போராட்டம் செய்தார். ஏன் சிறை வாசலில் படுத்தும் அதிர்வலையை ஏற்படுத்தினார். அதன்பின்னே சாத்தியமானது அந்த சந்திப்பு!


வரலாற்றில் ஃபிடல் கேஸ்ட்ரோ சே குவாரா சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே மாதிரியான சந்திப்பு தான் ராஜமுந்திரி சிறையில் நிகழ்ந்த சந்திரபாபு மற்றும் பவனின் சந்திப்பு. அந்த சந்திப்பு கியூபாவை கைப்பற்ற காரணமாய் அமைந்தது, இந்த சந்திப்பு ஆந்திராவுக்காக..


வெற்றியை சுவைத்த பவன்:


அங்குதான் தொடங்கியது. தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக இடையேயான வெற்றிக்கூட்டணி. இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் தீயாய் இறங்கிய பவன், பாஜகவின் முக்கிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து கூட்டணியை பலப்படுத்தினார். ராஜாகால போர் வாகனம் போன்ற வாகனத்தில் வலம் வந்து, இவர் செய்த பிரச்சாரப் போர் வீண்போகவில்லை!


21 பேரவை தொகுதிகளிலும் 2 மக்களவை தொகுதிகளிலும் களம் கண்ட ஜனசேனா 100 சதவீத வெற்றியை சுவைத்தது. பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட பவன் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். பத்து ஆண்டு அரசியல் வாழ்வில் முதல் முறையாக ஆந்திர துணை முதல்வராக பதவியேற்றார் பவன் கல்யாண்!




என்டிஏ கூட்டத்தில் பவன் என்றால் ’புயல்’ என மோடியே வியந்து பாராட்டும் அளவிற்கு உச்சம் தொட்டவர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியால் சாதிக்க முடியாத அரசியல் அத்தியாயத்தை அசால்ட்டாக அலற விட்டுள்ளார் பவர் ஸ்டார் பவன் கல்யாண்