நக்மா


இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலங்களுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. அதில்  நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நக்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்ட நக்மா,18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தனக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என  பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.


இந்நிலையில், நக்மாவின் அதிருப்தி குறித்து ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.


என்னைவிட திறமைசாலிகள்


இன்று எம்பி பதவிக்கு வேட்புமனுவைத்தாக்கல் செய்த ப.சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், நக்மாவின் அதிருப்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,


10 சீட்டு மட்டுமே இருக்கும்போது அதனை 10 பேருக்கு மட்டுமேதானே கொடுக்க முடியும். நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என கேள்வி கேட்டார். கட்சி அறிவித்த வேட்பாளர்களைக் காட்டிலும் திறமையானர்வர்கள் இருக்கிறார்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, வேட்பாளர்கள் தேர்வு கட்சியின் முடிவு. நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. நானும் ஒரு வேட்பாளர்தான் ஆனால் என்னைவிட திறமைசாலிகள் இந்தியாவில் பலர் உண்டு என அவர் தெரிவித்தார்.




ப.சிதம்பரம்


தமிழ்நாட்டிலுள்ள 6 மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3ல் திமுக கட்சி போட்டியிடுகிறது. திமுக தன்னுடைய கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த இடத்திற்கான வேட்பாளர் யார் என்பதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்தார்


வேட்புமனுத் தாக்கல்


இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நாளை கடைசி நாள் என்பதால் இன்று தன்னுடைய வேட்புமனுவை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இது குறித்து இன்று காலை ட்வீட் செய்த ப.சிதம்பரம், ''மாநிலங்களைவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.


காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, மில்லியன் கணக்கான காங்கிரஸ் உறுப்பினர்கள், சகாக்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டிருந்தார்.