அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் தான் என்று கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

செங்கோட்டையன் vs எடப்பாடி:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளின் பாராட்டு விழா நடத்திய போது அதை புறக்கணித்தார் செங்கோட்டையன்.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன்  சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக புறக்கணித்தார். இதன் மூலம் எடப்படி பழனிசாமி மீது அவருக்கு உள்ள அதிருப்தி வெட்ட வெளிச்சம் ஆனது.

இதனிடையே தனியார் நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன்,”நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ, அதில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது.பாரதியார் சொன்னதைப் போல, சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்” என்று கூறியிருந்தார். இதன் மூலம் எடப்படி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்ததாக அரசியல் வட்டாரத்த்தில் பேசப்பட்டது.

ஓபிஎஸ் மகன் ஆதரவு:

இந்த நிலையில் தான் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இருந்து வரும் நிலையில் அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் தான் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”கொங்கு நாட்டு தங்கம். எனது அரசியல் குருமார்களின் ஒருவர். கழகத்தின் உண்மை தொண்டன். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக செங்கோட்டையனுக்கு ஆதரவாக டெல்லி பாஜக செயல்படுகிறது என்றும் சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் அதிமுகவை செங்கோட்டையன் கைப்பற்றுவார் என்றும் தகவல் வெளியாகி வரும் சூழ்நிலையில்க்  இவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது