பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,’ தமிழ்நாட்டில் இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறதா என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் கூறினர். தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டன இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.




மேலும், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா 10 பேரிடம் பேசினாலும், பத்தாயிரம் பேரிடம் பேசினாலும் அதுகுறித்து கவலை இல்லை என்றும், அதிமுக உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.


Petrol and diesel rate | விலையில் மாற்றமில்லை; பெட்ரோல், டீசலின் இன்றைய நிலவரம்!


தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது. அணில் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதுமா பாதிப்பு  ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பிய அவர். இது விஞ்ஞான காலம் என்றார். மேலும், அணிலால் மின்வெட்டு என்று பேசுவதை விட்டுவிட்ட, மின்வெட்டை சரிபடுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை அடிப்படையில்தான் மின்வாரியத்திற்கு கடன் ஏற்பட்டது” என்று கூறினார்.


முன்னதாக, முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி.சண்முகம் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம், ரோஷனை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்தப்புகாரில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் சிலர் தொலைபேசி வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி இருந்தார். அதன் அடிப்படையில்  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை காவல்நிலையத்தில் சசிகலா மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட (501(1),507 r/w,109 IPC and 67 IT Act) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Siva Shankar Baba | இன்று மீண்டும் புழல் சிறை : சிவசங்கர் பாபாவும், 3 நாள் விசாரணையும்..!