இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆரால்‌ தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை அளிக்க வேண்டும்‌ என்பதற்காக துவங்கப்பட்ட மாபெரும்‌ மக்கள்‌ இயக்கமாம்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, தொடர்ந்து மூன்று முறை எம்‌.ஜி.ஆர்‌.  தலைமையில்‌ ஆட்சி அமைத்தது.


சத்துணவுத்‌ திட்டம்‌, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தியது, தஞ்சையில்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகம்‌ உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியது, இலவச வேட்டி சேலைத்‌ திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஐந்தாவது உலகத்‌ தமிழ்‌ மாநாட்டை நடத்தியது எனப்‌ பல்வேறு சாதனைகளை எம்‌.ஜி.ஆர்‌.‌ நிகழ்த்திக்‌ காட்டினார்‌.


தடைகளைத் தகர்த்தெறிந்த ஜெயலலிதா


அவரின்‌ மறைவிற்குப்‌ பிறகு, பல்வேறு தடைகளைத்‌ தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுக பொதுச்‌ செயலாளராகப் பொறுப்பேற்றுக்‌ கொண்டு, நான்கு முறை தமிழ்நாட்டில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியை அமைத்தார்‌. தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌, அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையம்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌, விலையில்லா அரிசி, கட்டணமில்லாக் கல்வி எனப்‌ பல்வேறு மக்கள்‌ நலத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி சாதனை படைத்தார்‌.


நாடாளுமன்ற மக்களவையில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவைச் சாரும்‌.


அதல பாதாளத்திற்கு சென்ற அதிமுக


அவரின் மறைவிற்குப்‌ பிறகு, துரோகம்‌ உள்ளே நுழைந்ததன்‌ விளைவாக, அதர்மங்கள்‌ அதிகரித்து துரோகச்‌ செயல்கள்‌ தாண்டவமாடி, கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக்‌ கூட்டத்தால்‌ குழி தோண்டிப் புதைக்கப்பட்டதன்‌ காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில்‌ மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.


ஏழு மக்களவைத்‌ தொகுதிகளில்‌ டெபாசிட்‌ இழப்பு, 32 தொகுதிகளில்‌ மூன்றாவது இடம்‌, கன்னியாகுமரியில்‌ நான்காவது இடம்‌, புதுச்சேரி யூனியன்‌ பிரதேசத்தில்‌ நான்காவது இடம்‌ என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத்‌ தேர்தலில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ சந்தித்தது.


துரோகியை மக்கள்‌ நம்பத்‌ தயாராக இல்லை


இதன் மூலம்‌, முதலமைச்சர்‌ பதவிக்கு பரிந்துரைத்தவர்‌, முதலமைச்சர்‌ பதவியில்‌ அமர்த்தியவர்‌, முதலமைச்சர்‌ பதவியில்‌ தொடர துணை புரிந்தவர்கள்‌ என அனைவரையும்‌ முதுகில்‌ குத்திய துரோகியை மக்கள்‌ நம்பத்‌ தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.


இந்தத்‌ துரோகச்‌ செயல்‌ காரணமாக, ஜெயலலிதா ஆட்சிக்‌ காலத்தில்‌ 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட “துரோகம்‌” தியாகத்தைப்‌ பற்றி பேசுவது சாத்தான்‌ வேதம்‌ ஓதுவதுபோல்‌ உள்ளது.


இந்த நிலைமை நீடித்தால்‌, எத்தனை ஆண்டுகளானாலும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல்‌, அதன்‌ வாக்கு சதவீதம்‌ குறைந்து கொண்டே செல்லும்‌. வெற்றிக்‌ கனி என்பது எட்டாக்‌ கனியாகிவிடும்‌.


“தினைத்துணை நன்றி செயினும்‌ பனைத்துணையாகக்‌


கொள்வர்‌ பயன்தெரி வார்‌.”


அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும்‌, பண்புள்ளவர்கள்‌ அதைப்‌ பனை அளவுக்குக்‌ கருதிக்‌ கொள்வார்கள்‌ என்கிறது திருக்குறள்‌.


பண்புள்ளவர்கள்‌ தலைமைப்‌ பதவிக்கு வர வேண்டும்‌


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ வீறுகொண்டு எழ வேண்டுமென்றால்‌, பிரிந்தவர்கள்‌ ஒன்றிணைய வேண்டும்‌. பிரிந்தவர்கள்‌ ஒன்றிணையவேண்டுமென்றால்‌ பண்புள்ளவர்கள்‌ தலைமைப்‌ பதவிக்கு வர வேண்டும்‌. எப்படிப்பட்ட பாவத்தைச்‌ செய்தவர்க்கும்‌ அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. ஆனால் செய்‌ நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம்‌ இல்லை என்கிறார்‌ திருவள்ளுவர்‌.


 எனவே, “எனக்குப்‌ பின்னாலும்‌, இன்னும்‌ எத்தனை நூற்றாண்டுகள்‌ வந்தாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மக்களுக்காகவே இயங்கும்‌" என்ற ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றிட, 2026ஆம்‌ ஆண்டு சட்டமன்ற பொதுத்‌ தேர்தலில்‌ நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து களப்‌ பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர வைக்க உறுதி ஏற்போம்‌’’.


இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.