சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அக்காட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்று நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜிகே மணி, தமிழகத்தில் தற்பொழுது நல்ல மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனால் பெய்த மழை நீர் சேமிக்க வழி இன்றி கடலில் சென்று கலப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே வறட்சி காலத்தை சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார். 



காலநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளில் மழைக்கு நிகரான வரட்சியும் இருக்கக்கூடும் எனவே மாநில அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் பெரும் பாசன திட்ட குழு உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தர்மபுரியில் அனைத்து ஏரிகளும் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் கடலில் கலக்காமல் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்தின் உரிமையை தட்டிப்பறிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜிகே மணி காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்றார். மேலும் தென்பெண்ணை பாலாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கான இழப்பீடு நிதியை மத்திய அரசு கூடிதலாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தில் உள்ள சேலம், மதுரை, திருச்சி, கோவை மற்றும் தஞ்சை போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும், அப்படி பிரித்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்றும் ஜி கே மணி வலியுறுத்தினார். மேலும் புதிதாக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறோம் என்று கூறினார்.


இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உட்பட சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.