தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இன்றி வெளியான அழைப்பிதழால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்


பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு?


பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றபின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.


தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி


இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுறைகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்கிறார் பிரதமர் மோடி. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா ஸ்னோவால், சாந்தனு தாக்கூர், நாயக் பெயர்களும் மாநில அமைச்சர்களான ஏ.வ.வேலு மற்றும் கீதா ஜீவன் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.


கனிமொழி பெயர் இடம்பெறாததற்கு கடும் எதிர்ப்பு


ஆனால், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இடம்பெறவில்லை. மாநில அமைச்சர்கள் பெயரை போட்டுவிட்டு, தூத்துக்குடியின் எம்.பியான கனிமொழி பெயரை எப்படி போடாமல் விட்டார்கள் என்று நேற்று சமூக வலைதளங்களில் மத்திய அரசை விமர்சித்து திமுகவினர் பதிவு செய்தனர்.


இரண்டாவதாக வெளியான புதிய அழைப்பிதழில் கனிமொழி பெயர்


இதனை தொடர்ந்து இரண்டாவதாக மற்றொரு அழைப்பிதழ் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பெயர் இடம் பெற்றது. ஆனால், முதல் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த கீதா ஜீவன் பெயர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் கனிமொழி பெயர் அச்சிடப்பட்டிருந்தது.


கனிமொழி பெயர் விடுபட்டது தவறுதலாலா இல்லை திட்டமிட்டா ?


தூத்துக்குடி தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கான நபராகவும் அந்த தொகுதியின் எம்.பியாகவும் இருக்கும் கனிமொழி பெயரை மத்திய அரசு அழைப்பிதழில் முதலில் அச்சிடாமல் விட்டது தவறுதலாலா அல்லது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது. பல்லடம் பொதுக்கூட்டத்தில் திமுகவை தாக்கி பிரதமர் மோடி பேசிய நிலையில், மக்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி பெயர் புறக்கணிக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளார்.


நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்த கனிமொழி - புதிய அழைப்பிதழால் மனம் மாறினார்


இந்நிலையில், பெயர் அச்சிடப்படாத நிலையில் இன்று நடைபெறும் பிரதமர் நிகழ்ச்சியை புறக்கணிக்க முதலில் கனிமொழி முடிவு செய்திருந்ததாகவும் பின்னர் அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டு அதற்கான விளக்கமும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்றும் அவரது அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு ?


பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் பங்கேற்கும் அழைப்பிதழில் பெயர் இடம்பெறவில்லை என்றும் அதுமட்டுமின்றி தன்னுடைய சொந்த தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என்பதால் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


ஆனால், ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும் நிகழ்ச்சி தொடர்பாக தன்னுடைய பெயரில் பெரிய அளவில் விளம்பரங்களையும் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது