2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்தியா முழுவதும் உள்ள தேசிய அளவிலான கட்சிகளும் மாநில அளவிலான கட்சிகளும் 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலை இரண்டு கூட்டணிகளாக அமைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதில் ஆளும் பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளும், எதிர்கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற பெயரிலும் கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. 


இதில் தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டில் திமுக தலைமையிலும், அதிமுக தலைமையிலும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். இந்நிலை, நேற்று அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் வரும் 2024ஆம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி சந்திக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அதிமுகவின் இந்த முடிவினால் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவிழக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா 024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகவும், I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் நீண்ட நெடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா?. புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர்.


திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச் சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021 ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.


ஆகவே,திமுக தலைமையலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே. இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன், விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.


பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாடு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.