இராஜ இராஜ சோழனின் பிறந்தநாள் விழாவுக்கான புகழுரைச் செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக சதய விழா கொண்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு சதய விழா நேற்று மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சிறப்பாக தொடங்கியது.


இந்நிலையில், இராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புகழுரையை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்“ என்று தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 38 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜசோழன்,உலோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


சதய விழா கொண்டாட்டம்:


சதய விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் சார்பில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார்.



பின்னர் பெரிய கோயில் அருகில் உள்ள மாமனார் ராஜராஜன் சோழன் சிலைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து.செல்வம், மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா கந்தபுனேனி, சதய விழா குழு உதவி ஆணையர் கோ.கவிதா, எம்.எல்ஏ., துரை.சந்திரசேகரன்,  தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் எஸ் .சி .மேத்தா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


திருமுறை ஓதுவார் திருமறை பன்னுடன் சார்பில் திருமுறை வீதி உலா தஞ்சையின் ராஜ வீதிகள் என்றழைக்கப்படும் மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, வழியாக மீண்டும் பெரிய கோயிலை வந்தடைந்தது. அடுத்து சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்குபல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேராபிஷேகமும், பெரும் தீப வழிபாடும் நடைபெற்றது.


ரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சதய விழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமைப்பினரும் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். சதய விழாவை ஒட்டி தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.