முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி போலெல்லாம் கிடையாது. தவறு செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். இந்த விஷயத்தில் அவர் ஜெயலலிதாவைப் போல குணம் கொண்டவர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் நடந்திருக்கிறது நேற்றைய அமைச்சர்கள் பொறுப்பு மாற்றம். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது ஆரம்பம் முதலே ஏகப்பட்ட விமர்சனங்கள், ஊழல், வசூல் புகார்கள் அதிகாரிகள் தரப்பிடம் மட்டுமிருந்து மட்டுமல்லாமல், கட்சியினரிடமிருந்தே அதிருப்தி வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. சமீபத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரி நடராஜன் அலுவலகத்தில் நடந்த ரெய்டில் பல லட்சம் பணத்துடன் கையும் களவுமாக சிக்க அப்போதே ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசு முறைப்பயணமாக துபாய் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தான் முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனை சாதிப்பெயர் சொல்லி திட்டியதாக செய்திகள் வெளியாக மாலையே ராஜகண்ணப்பனை வளம் கொழிக்கும் போக்குவரத்துத்துறையில் இருந்து மாற்றி,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.




பதவிப் பறிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது துறையை மட்டும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகண்ணப்பன். எஸ்.கண்ணப்பன் என்பதை நியூமராலஜிப்படி ராஜகண்ணப்பன் என்று மாற்றிக் கொண்டார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் 1972ல் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் கடுமையாக உழைத்து  எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவின் மாவட்ட மாணவரணி செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளரும் ஆனார். இந்த சமயத்தில் எம்ஜிஆர் இறந்துவிட, அதிமுக இரண்டு பிரிவுகளானது. அப்போது ஜெயலலிதா தரப்பிற்கு ஆதரவாக இருந்து, ஜானகி தரப்பை கடுமையாக எதிர்த்தார் ராஜகண்ணப்பன். அதற்கு பரிசாக கிடைத்தது தான் 1989 தேர்தல் வெற்றி. திருப்பத்தூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். ஆட்சிக்கலைப்புக்குப் பின் நடைபெற்ற 1991 தேர்தலில் அதே திருப்பத்தூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.  நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய மூன்று முக்கியமானத் துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார் ராஜகண்ணப்பன். அமைச்சராக மட்டுமல்லாமல், அதிமுகவில் முக்கியப் பதவியாகக் கருதப்படும் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்தார் ராஜ கண்ணப்பன். அரசியலில் நீண்ட அனுபவம் உடையவராக இருந்த ராஜகண்ணப்பன், மறைந்த ஜெயலலிதாவிற்கு எப்போதும் நம்பகமானவராகவே இருந்தார். மூன்று அமைச்சர்கள் பொறுப்பு மட்டுமல்லாமல் கட்சிப் பணிகளையும் திறம்பட செய்ததால் அவரை கம்ப்யூட்டர் கண்ணப்பன் என்றே அழைப்பார் ஜெயலலிதா.  





அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அதிமுக தோல்வியடைய அதிமுக எதிர்கட்சியாக இருந்தது. இந்த சமயத்தில் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தமிழ்த் தேசம் என்ற தனிக்கட்சியை 2000த்தில் தொடங்கினார். இந்த கட்சியை தொடங்கியபோது இவர் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் சுமார் 25 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டம் அனைத்து செய்திகளிலும் முக்கியச் செய்தியானது. இவருக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவரை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்பின அதிமுகவும், திமுகவும். 2001ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி வைத்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2004ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கினார் ராஜகண்ணப்பன். ஆனால், அவரது கட்சி அவர் சார்ந்த சமூகத்திற்கான கட்சியாக கட்டமைக்கப்பட்டதால், நாளடைவில் செல்வாக்கை இழந்தது. அதனால், கட்சியைக் கலைத்துவிட்டு, 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இணைந்து அதே இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கடைசி வரை எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், 2009ல் திமுகவில் இருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவிலேயே ஐக்கியமானார். அதற்குப் பரிசாக 2009ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அவர் சுமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால், ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய அளவில் வெற்றிபெற்றபோதும் கூட திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன்  தோல்வியடைந்தார். ஆனால், ராஜகண்ணப்பன் மீதான நம்பிக்கை மட்டும் ஜெயலலிதாவிற்கு போகவில்லை. 2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக ராஜகண்ணப்பனை நியமித்தார். ஒரு ஆளை நம்பி 10 தொகுதிகளை ஜெயலலிதா கொடுக்கிறார் என்றால் ராஜகண்ணப்பன் எந்த அளவிற்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கானவர் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால், அதன்பிறகு அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் ராஜகண்ணப்பன். கட்சியிலும் அவருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. அதனால் கடுப்பின் உச்சத்தில் இருந்தார். போதாக்குறைக்கு 2016 தேர்தலிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் மீண்டும் திமுக பக்கமே தாவலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் ராஜ கண்ணப்பன். பெரியகருப்பனுடன் ஏற்பட்ட மோதலாலும், அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பதாலும் தான் திமுகவில் மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவிற்கு தாவினார். ஆனால் அங்கும் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதால் விரக்தியில் இருந்தார்.




2019 நாடாளுமன்றத் தேர்தலிலாவது  ராமநாதபுரம் அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஜெயலலிதா இறப்பிற்குப் பின் ஓபிஎஸ்ஸை ஆதரித்தாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் எதிர்பார்த்த இரண்டு தொகுதியையுமே பாஜகவிற்கு கொடுத்தது அதிமுக. இதனால் ராஜகண்ணப்பன் திமுகவிற்கு தாவுவது என்பது உறுதியானது. 2019 தேர்தல் நடந்தபோதே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த அவர், திமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரமும் செய்தார். பின்னர், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரோடு மீண்டும் திமுகவில் இணைந்தார்.


2021 சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தது திமுக. அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமியை 20721 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அரசியலில் சீனியரான ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத் துறையை வழங்கியது திமுக தலைமை. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரானார். அதிகாரத்தில் இல்லாமல் பணப்பட்டினியில் இருந்தாரோ என்னவோ, போக்குவரத்துத் துறையில் இருந்து ஏகப்பட்ட புகார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லாம் தங்கள் செயல்பாடுகளால் செய்திகளில் அடிபட்ட நிலையில், சர்ச்சைகளில் மட்டுமே அடிபட்டார் ராஜகண்ணப்பன். 




முதல் சர்ச்சை விசிக தலைவர் தொல்.திருமாவளவனை ப்ளாஸ்டிக் சேரில் அமர வைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜகண்ணப்பனை சந்தித்தார் திருமாவளவன். அப்போது சொகுசு சோஃபாவில் ராஜகண்ணப்பன் அமர்ந்திருப்பது போலவும், திருமாவளவன் பழைய பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியானது. அருகிலேயே மற்றொரு சோஃபா இருக்கும்போது அவரை பிளாஸ்டிக் சேரில் அமரவைத்தது தவறானது என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இதை விமர்சனம் செய்திருந்தனர். இது தொடர்பாக பின்னாளில் திருமாவளவனே விளக்கம் அளித்திருந்தார்.  அதன் பின்னர், ராஜகண்ணப்பன் சர்ச்சையில் சிக்கியது வழக்கறிஞர் பணி நியமனத்தில்.


ஆட்சி மாற்றங்களின் போது  ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். தமிழகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கும் அரசு  வழக்கறிஞர்களையும் அப்படியே நியமிப்பது வழக்கம்.  அப்படித்தான் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக. டெப்போவிற்கு வழக்கறிஞர்களை நியமித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன். இதற்காக 199 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் பட்டியலை போக்குவரத்து கழக துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் ஐஏஎஸ்க்கு அனுப்பி இருக்கிறார்.  இந்த பட்டியலை ஏற்று அவரும் கடந்த 2021 நவம்பர் 23ஆம் தேதியன்று இதற்கான ஆணையை பிறப்பித்தார். ஆனால், அந்த உத்தரவு  உத்தரவு வெளியான 16-வது நாளில் டிசம்பர் 9ஆம் தேதியன்று போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் அந்த ஆணையை ரத்து செய்து வெளியிட்டிருக்கிறார். காரணம், இடைப்பட்ட நாள்களில் முதலமைச்சரிடம் குவிந்த புகார்கள் தான். இந்த நியமனத்தில் பெரும்பாலானோர் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும்,  மாற்றுக் கட்சியினர்தான் அதிகம் இடம்பெற்றுள்ளார்கள்,  குறிப்பாக பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்று ஆதாரங்களுடன் புகாரை தட்டிவிட நியமனத்தை மொத்தமாக ரத்து செய்தார் முதலமைச்சர். மேலும் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் ராஜ கண்ணப்பன் மகனுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் செய்ததைப் பார்த்து அதிர்ச்சியில் ஆடிப்போயிருந்தது தலைமை. 


அதுமட்டுமல்ல, போக்குவரத்துத் துறை சார்பாக வழங்கப்படவிருந்த தீபாவளி  ஸ்வீட்டிலும் கமிஷன் பார்க்க, ஸ்வீட்கள் குறித்து எழுந்த புகார்களால் மொத்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டு அந்த ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த உச்சபச்ச அதிர்ச்சி போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் சிக்கியது. இந்த பணம் அனைத்தும் போக்குவரத்துத்துறையில் பணி மாறுதல், பதவி உயர்வு போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது. அதோடு அவரது காரில் இருந்து பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. நடராஜனுக்கும், கண்ணப்பனுக்கும் இடையே இருந்த தொடர்பை ஆதாரங்களுடன் முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக முதலமைச்சரின் துபாய் பயணத்திற்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது.


துபாயில் இருந்து வந்த அடுத்த நாளே, சாதிரீதியாக திட்டினார் என்று முதுகுளத்தூர் பிடிஓ கண்ணை கசக்க, மாலையே அவரது போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பதவி பறிப்புக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. கடந்த 28,29 ஆகிய இரண்டு தினங்களில் மத்திய அரசு பணியாளர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்துத் துறையும் பேருந்துகளை இரண்டு நாள்கள் இயக்கப்போவதில்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், முதல்நாள் போராட்டத்தின் போது பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்துத்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் ராஜகண்ணப்பன் இதை சரிவர கையாளாமல் விட்டுவிட்டார் என்ற அதிருப்தியும் அரசுக்கு இருந்திருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து தான் அவரது போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பைப் பறிக்க வைத்திருக்கிறது.


 அமைச்சர் பொறுப்பு பறிக்கப்படாமல் அமைச்சர் பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் அவரது சமூகம் தான். அவர் பதவி பறிக்கப்பட்டால் அவர் சார்ந்த சமூகத்தின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டே அவர் பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இவர் மீது ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 2005ல் போடப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2015ல் இவர் மீதான வழக்குகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியிலாவது ராஜகண்ணப்பன் தொடர்ந்து நீடிப்பாரா, அல்லது கடந்த காலங்கள் போலவே இத்துறையிலும் நடந்துகொள்வாரா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில்சொல்லும்.