நாளை மாலைக்குள் பொதுச்சின்னம் குறித்து உத்தரவிட வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு நாளை மாலைக்குள் பொதுச்சின்னம் ஒதுக்குவது குறித்து உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தினருடன் இணைந்து ஐ.ஜே.கே. கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
ஐ.ஜே.கே. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் குறித்த விவரங்களுடன் வேட்புமனுத் தாக்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, உரிய விண்ணப்பம் அளித்தும் மார்ச் 11-ம் தேதி மனு நிராகரிக்கப்பட்டது. எங்கள் மனுவை முறையாகப் பரிசீலித்து மார்ச் 19-ம் தேதிக்குள் பொதுச் சின்னம் ஒதுக்கச் சட்டத்தில் இடமுள்ளது.வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ ரிக்‌ஷாவை ஐஜேகேவின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என்றும், அல்லது வேறொரு பொதுச் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

Continues below advertisement



இதேபோல தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
மூன்று வழக்குகளிலும் பொதுவான உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு, ஜனநாயகத் திருவிழாவில் வாக்குரிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோலத் தேர்தலில் போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டியதும் முக்கியம் என்றனர்.
விண்ணப்பத்தில் இருந்த குறைபாடுகளைத் திருத்தம் செய்து சமர்ப்பிக்க விதிகள் இல்லாததால், தேர்தல் ஆணையம் எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய விண்ணப்பத்தையும் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டதால், அவர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.
அதன்படி ஐ.ஜே.கே., சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை பொதுச் சின்னம் கோரி இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவற்றைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து நாளை மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola