விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனிதொகுதி. 2034 ஆம் ஆண்டு வரை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தனி தொகுதியாக தொடரும்.  கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் போது திண்டிவனம் மக்களவை தொகுதி கலைக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல்முறையாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்தித்தது. 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளார் ஆனந்தன் 3,06,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமீபத்தில் மறைந்த சாமிதுரை 3,04,029 வாக்குகள் பெற்று வெறும் 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். அதனை தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் முத்தையன் 2,89,337 வாக்குகள் பெற்று 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.


2019 நாடாளுமன்ற தேர்தல்


கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று 1,28,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கே ஒதுக்கி, மீண்டும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மீண்டும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டால் தனி சின்னத்தில் போட்டியிடுவது என்ற உறுதியான நிலைப்பாட்டை அக்கட்சி  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ரவிக்குமார் தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் அவரின் வெற்றி என்பது முட்டிமோதி வரும். அந்த வெற்றி மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமைச்சர் பொன்முடியின் கண்ணசைவு இளந்திரையனுக்கு


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிடும் பட்சத்தில் மாவட்ட துணை செயலாளர் பதவி வகிக்கும் இளந்திரையன், மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஷ்பராஜ் இருவரும் போட்டியில் உள்ளனர். ஆனால் அமைச்சர் பொன்முடியின் கண்ணசைவு இளந்திரையனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


 



தயா இளந்திரையன்


சாதி ரீதியாக வாக்குகளை திரட்டும் செல்வாக்கு


கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வானூர் (தனி தொகுதி) தொகுதியை கேட்டு புஷ்பராஜ் பெரும் முயற்சி செய்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பட்டியலில் இல்லாத வானூர் தொகுதியை வலுகட்டாயமாக விசிக-வுக்கு பொன்முடி  வழங்கினார் என்ற பேச்சும் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் புஷ்பராஜ் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்த அமைச்சர் பொன்முடி இசைவு தெரிவிக்கமாட்டார் என்பது கண்கூடு. 2024 நாடாளுமன்ற வேட்பாளர் போட்டியில் இருக்கும் புஷ்பராஜ் கட்சி பணியிலும், தேர்தல் பணியிலும் மிகுந்த அனுபவம் உள்ளனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்டத்தில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். விழுப்புரம், வானூர் ஆகிய தொகுதிகளில் சாதி ரீதியாக வாக்குகளை திரட்டும் செல்வாக்கு உள்ளவர். இதுவே இவருக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


வேட்பாளர் போட்டியில் உள்ள இளந்திரையன் தற்போது தான் மாவட்ட துணை செயலாளர் பொறுப்புக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி பணி அனுபவமோ, தேர்தல் பணி அனுபவமோ பெரிதாக இல்லாதவர். கட்சியினருடன் இணக்கம் காட்டாதவர். செலவு செய்ய தயங்குபவர், விழுப்புரம் நகரத்தை தாண்டி மாவட்ட அளவில் பெரிதும் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பரிட்சயம் இல்லாதவர். சில இலக்கிய கூட்டங்களை தவிர கட்சி நிகழ்ச்சி உள்பட எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைக்காட்டாதவர் என பல பின்னடைவுகள் உள்ளது. ஆனால் பொன்முடியின் ஆசி பெற்றவர். இளந்திரையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்குள்ள ஒரே சாதகமான நிலை என்றால் அது அவரின் அமைதி.


 


 



புஷ்பராஜ்


ஒருவேளை வெற்றி பெற்றால் அவர் பின்னால் பட்டியலின மக்கள் அணி திரள்வார்கள், ஆதிக்கம் செலுத்துவார்கள் என நினைக்கும் மாற்று சமூகத்தினரின் வாக்குகள் புஷ்பராஜிக்கு கிடைப்பது கடினம். ஆனால் இளந்திரையன் வெற்றி பெற்றால் அமைதியானவர், தனக்கென தனியாக அணி திரட்டாதவர், இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர், பட்டியலின மக்கள் இளந்திரையன் பின்னால் அணிதிரள மாட்டார்கள் அல்லது அவர் அப்படியான முன்னெடுப்புக்கு செல்லமாட்டார் என நினைக்கும் மாற்று சமூகத்தினர் வாக்களிப்பார்கள். இது எப்படியானது என்றால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு எந்த பிரச்சினையும் செய்யாத, தாங்கள் சொல்வதை கேட்டு நடக்கும் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை மாற்று சமூகத்தினர் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைப்பது போன்றது.



அதிமுக சார்பில் வேட்பாளராக முத்தையனுக்கு வாய்ப்பு? 


திமுகவில் இருந்து கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற முத்தையன் பொன்முடியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது அதிமுகவில் உள்ளார். இவர் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். இளந்திரையன் போன்றே முத்தையனும் கட்சி பணியிலோ, தேர்தல் பணியிலோ பெரிதாக அனுபவம் இல்லாதவர். மருத்துவர் முத்தையனை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அரசியல்வாதி முத்தையனை யாருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும். பொன்முடிக்கு இளந்திரையன் எப்படியோ அப்படித்தான் சிவி.சண்முகத்திற்கு முத்தையன்.


 



அதிமுக முத்தையன்


கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. எதிரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய சிவி.சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சாதி ரீதியாக கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக “விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றால் நம் வீட்டு பெண்கள் வெளியில் நடமாட முடியாது” என்ற மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த விமர்சனம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தாண்டி தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


இந்த பேச்சு அதிமுகவுக்குள் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களிடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவால் பெற முடியாமல் போனது. சி.வி.சண்முகத்தின் மீதான தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் தற்போதுவரை தொடர்கிறது என்றே கூறவேண்டும். இதனை சரி செய்ய சிவி.சண்முகம் தற்போது வரை எந்தவிட முன்னெடுப்பும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எதிர் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பது குதிரைக்கொம்பானது.




பாமக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. அப்படி பாமக தனித்து போட்டியிட்டால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வடிவேல் ராவணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பாமகவின் தனித்து போட்டி என்பது அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையாக பெற வாய்ப்புள்ள நிலையில். வன்னியர் வாக்குகளை பெறுவதில் திமுக, அதிமுக, பாமக என மூன்றாக பிளவுபடுவதால் இதில் அதிமுக-பாமக வெற்றி என்பது சந்தேகத்திற்குறியதாக மாறியுள்ளது.


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 2024 தேர்தலில் திமுகவே நேரடியாக போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டாலும் வெற்றி உறுதியாகிவிடும் என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.