தமிழகத்தில் வெடுகுண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவன், சீமான் தேச விரோதிகள் என்றும் தீயசக்தியாக செயல்பட்டு வரும் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 


புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பல்வேறு துறை சார்ந்த உயர் நிலையில் உள்ளவர்கள் எழுதிய "மோடி 20" புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கும் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது:-  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சியை பற்றி தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட்ட பிறகும், பிரிவினை வாதத்தை பரப்பும் அமைப்பாக இந்த அமைப்புகள் உள்ளதால் 15 மாநிலங்களில் இந்த என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது என்றும், இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வது சுலபமானது, சிசிடிவி காட்சிகள் இருந்தும் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னனியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


திருமாவளவன், சீமான் எந்த ஜென்மங்கள் என தெரியவில்லை, அவர்கள் தேச விரோதிகள் அவர்கள் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார்கள் என கூறிய எச்.ராஜா, இருவரும் தீய சக்தி என்றும், உடனடியாக தமிழக அரசு இருவரையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் , தமிழக அரசாங்கம் விசிக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விசிக அமைப்பை தடை செய்யும் அளவிற்கு நியாயம் உள்ளது என கூறினார். மேலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் அதிமுகவின் நண்பர்கள் தான் என ஜெயக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு ஓட்டுக்காகத்தான் இதுபோல் பேசுவார்கள் என  கூறினார். மேலும் தமிழக டிஜிபி இப்பதான் விழித்துள்ளார் என்றும் 15 மாதமாக தூங்கி கொண்டிருந்ததாக தெரிவித்த எச்.ராஜா,  தமிழக போலீஸ் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. என்.ஐ.ஏ தான் அனைவரையும் கைது செய்துள்ளனர் என்றும், தமிழ்நாடு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது என கூறிய அவர், கட்டப்பஞ்சாயத்து, கொள்ளை தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என பேசினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர