தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களான பொதுமக்களுக்கு திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை வலியுறுத்தி கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூரை அடுத்த வடிவேல் நகர், மில்கேட் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  




சில நாட்களுக்கு முன் நடந்த ரெய்டு காரணமாக, விஜயபாஸ்கர் இதில் பங்கேற்பாரா என்கிற கேள்வி இருந்தது. ஆனால் குறிப்பிட்டபடி அவர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றார். நீட்தேர்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 50க்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 




கரூர் மாவட்ட அதிமுக அறிவுறுத்தலின்படி 44 இடங்களில் ஆளும் திமுக அரசை கண்டித்து பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் கோவை சாலை வடிவேல் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பதாகையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றார். முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறிது நேரம் மட்டுமே நடந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒரே வரிசையாக நின்றனர். 




இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலில் அதிமுகவின் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கோஷங்கள் எழுப்பினார். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக திமுகவில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆவேசமாக திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். ( அவர் திமுக கட்சியில் இருக்கும் போது கரூர் மாவட்ட பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்) என்பது குறிப்பிடத்தக்கது. 




மிகவும் அமைதியாகவே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் பின்னர் செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது இது மாநிலம் முழுவதும் நடைபெறுவதால் இதற்கு பேட்டி வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 





பின்னர் செய்தியாளர்களிடமும், அதிமுக நிர்வாகிகள் இடமும் நீண்ட நேரம் நட்பு ரீதியாக பேசிய பிறகு மக்களோடு மக்களாக டீக்கடையில் டீ அருந்தினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் நகர போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட சில நிமிடங்களே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் கலைந்து சென்றனர். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மிக எளிமையாக அமைச்சர் அனைவரிடமும் பேசி பழகிய விதம் தற்போதுள்ள நிர்வாகிகளிடையே புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.