திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கு வாய்ந்த கட்சி. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்து பேசுவது, ஒருவரை இகழ்ந்து பேசுவது என தரம்தாழ்த்தி பேசும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அவர் உண்மையைப் பேசுவதே கிடையாது. மு.க.ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைப் பற்றியும் தெரியாது, நாட்டில் என்ன நடைபெறுகிறது என்றும் தெரியாது. யாராவது எழுதிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு படிப்பார். ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை இப்பொழுதே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.





நானும் 4 வருடங்களாக முதல்வராக இருக்கிறேன். ஒரு அதிகாரியைக் கூட மிரட்டியது இல்லை. அவர்களிடத்தில் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அவர்களிடம் அன்பாக பேசி, அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசாங்கத்திற்கே பெயர் கிடைக்கும். எங்கள் அரசாங்கத்திற்கு பெயர் கிடைப்பதற்கு அதிகாரிகள் ஒரு காரணம். ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, நான் வந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? என்று அதிகாரிகளையே மிரட்டுகிறார்.


அவருடைய மகன் உதயநிதியும் மிரட்டுகிறார், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? நாங்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்று டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரியையே மிரட்டுகிறார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே இவ்வளவு திமிர் இருக்கிறதென்றால் ஆட்சி, அதிகாரத்தை இவர்கள் கையில் கொடுத்தால் நாடு தாங்குமா? மக்களை, அதிகாரிகளை மிரட்டுவது தி.மு.க.வின் வரலாறு. 


நான் என்ன பாம்பா, பல்லியா. ஊர்ந்தும் போகவில்லை, நகர்ந்தும் போகவில்லை. நடந்து போய் பதவியேற்றுக் கொண்டேன்.  அண்ணா மறைவுக்குப் பின்னர், நெடுஞ்செழியன் தான் முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பாத்த போது குறுக்கு வழியில் சென்று முதல்வர் ஆனவர் கருணாநிதி. நாங்கள் அப்படி ஆகவில்லை. எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனால் முதல்வர் ஆனேன். ஆனால் கருணாநிதி, நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வர் ஆனார். அவர்கள் வந்த வரலாறு வேறு, நாங்கள் வந்த வரலாறு வேறு. ஒரு தலைவர் என்றால் தகுதி வேண்டும். பண்பு வேண்டும். அந்த தகுதியே இல்லாத தலைவர் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.