பைக் நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில், நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தியின் பேரன். என்ற வாசகத்துடன் வலம் வரும் வாலிபர்கள். எம்.ஆர்.காந்தியின் கார் டிரைவரின் மகனின் செயல் சமூக வலை தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராகவும், மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளில் பங்கு வகித்தவர். எம்.ஆர் காந்தி, இயக்கத்திற்காக திருமணம் கூட செய்யாமல் வாழ்பவர் எம்.ஆர்.காந்தி.

 

காலில் செருப்பு கூட அணியாதவர் என்றும் அனைத்து தரப்பினருடனும் சகஜமாக பேசும் நபராகவும் விளங்குகிறார். 2021 ஆம் ஆண்டு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் இருந்த காரணத்தால் எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடன் எப்போதும் அவருடைய கார் டிரைவரும் இருப்பார். பல நேரங்களில் எம்.ஆர்.காந்தி வீட்டிலயே தங்கும் அளவிற்கு அவரது அன்பை பெற்றவர் கார் டிரைவர் விஜயகுமார் என்கிற கண்ணன். 

 


 

டிரைவர் விஜயகுமாருக்கு அம்ரிஷ் மற்றும் ரிஷிக் என 2 மகன்கள் உள்ளனர். அவர்களை பல நேரங்களில் எம்.ஆர்.காந்தி செல்லும் கூட்டங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் தங்களை நாகர்கோவில் எம்.எல்.ஏ., பேரன் என்று அனைத்து இடங்களிலும் அடையாளபடுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களில் தன்னை ஒரு பெரிய ஆள் என்பது போல் சித்தரித்து காட்டும் அளவிற்கு மிகைபடுத்தி வீடியோ பதிவுகள் போடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ காந்திக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாருடன் டிக்டாக், எம்.ஆர்.காந்தி வாகனத்தின் முன்பு நின்று வீடியோ என பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது இரண்டு பைக் களிலும் நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியின் பேரன் என்று பொறிக்கப்பட்ட புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது சமூகவலை தளங்களில் தற்போது வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 

 



 

இது குறித்து எம்.ஆர்.காந்தியிடம் கேட்ட போது, எனது டிரைவரின் மகன்கள், அவர்கள் விபரம் தெரியாமல் இவ்வாறு செய்துள்ளனர். அதனை உடனடியாக நீக்க கூறி விட்டேன் என்று தெரிவித்தார்.

டிரைவர் விஜயகுமாரிடம் கேட்ட போது, சின்ன பசங்க ஏதோ ஒரு ஆர்வத்தில் போட்டுள்ளனர். பேரன் என்று கூறுவதில் தவறு இல்லை. எனக்கு விரோதமான ஒரு சிலர் இதனை பெரிதாக்கி விட்டுள்ளனர். அதனை உடனே அகற்றிவிட்டோம் என்று கூறினார்.