தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, கிளை கழகம் சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது,  திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்.


 



 

மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை அன்புமணி ராமதாஸ் நேரடியாக தேர்ந்தெடுத்தார். கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் அன்புமணியின் வருகையை எதிர்பாராத அக்கட்சியினர், உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். அன்புமணி ராமதாசை சூழ்ந்து கொண்டு, சிறுவர்கள், சிறுமிகள்,  பெண்கள் உள்ளிட்டோர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.‌ தொடர்ந்து அன்புமணி ராமதாஸ்,  வருகையை அறிந்த கிராமத்தைச் சார்ந்த நபர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். கிராம மக்கள் மற்றும் கட்சியினர் என அனைவரிடம், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "பண்டிகை காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன. அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்" என தெரிவித்தார் 



 

பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளை காத்திடும் வகையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தில் கரும்பினை சேர்த்து வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாட்ச் அரசியல் குறித்து கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், " நான் வாட்ச் கட்டவில்லை ,  என சிரித்துக் கொண்டு  பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே வேடிக்கையாக கையை தூக்கி காட்டினார்.



 

காப்புக்காடு சுற்று உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள், கல்குவாரி மற்றும் சுரங்கங்கள் அமைக்க கூடாது என அரசாணையை திராவிட முன்னேற்ற கழகம் தான் கொண்டு வந்தது. இது அப்பொழுது நல்ல நடவடிக்கையாக பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய காப்புக் காடுகளை தற்பொழுது ஒரு கிலோமீட்டர் குள்ளும் கல்குவாரி அமைத்துக் கொள்ளலாம் என அரசாணை பிறப்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. அரசு உடனடியாக இதை திரும்ப பெற வேண்டும்,  தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி இதற்காக போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கப்படும், தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்