கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


அமைச்சர் உதயநிதி பேச்சு:-


நான் பலமுறை கள்ளக்குறிச்சிக்கு வந்து இருக்கிறேன், அடிப்படை உறுப்பினராகவும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் வந்திருந்தேன், ஆனால் இந்த நிகழ்ச்சி, இந்த பயணம் என் வாழ்வில் மறக்கமுடியாதது, அமைச்சர் பொறுப்பேற்று உங்களிடம் வாழ்த்து பெற வந்து இருக்கிறேன். 


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்கக்கூடியவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதிக அளவில் தேர்தல் பணி செய்ய வேண்டும். கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம் பற்றி மகளிரிடம் எடுத்து செல்ல வேண்டும். 2024 மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல், திமுகவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கட்சி அலுவலகம் இருக்கும், ஆனால் அதிமுகவிற்கு மட்டும் மாவட்டத்திற்கு 3 கட்சி அலுவலகம் இருக்கும், எந்த ஆஃபிஸ் போகணும்னு தெரியாது, இதேபோல்தான் பாஜகவிற்கு அணிகள் உள்ளது, அவர்கள் தேர்தல் நேரத்தில் களமிறக்கி விடுவார்கள். சிபிஐ அணி, இடி அணி, ஐடி அணி வருவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அணிகள் சிபிஐ, இடி 95% எதிர்கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். 


தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக அஜித்பாவாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது, அவர் பாஜகவிற்கு வந்தபின்னர் புனிதர் ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வருகிறார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அனுமதி மறுக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்தது, அப்படி மிரட்டித்தான் அதிமுகவை அடிமை ஆக்கியது பாஜக, அது போல திமுகவை அடிமையாக்க நினைக்கிறது. பிரதமர் மோடி அவர்களே, தமிழ் நாட்டை ஆட்சி செய்வது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் கிடையாது, தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி செய்து வருகிறார். 


"மோடி இல்ல உங்க டாடியோ வந்தாலும் பயப்பட மாட்டோம்" "ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கு பயப்பட மாட்டோம்," அதிமுக வேண்டுமானால் சிபிஐ, ஈடி, ஐடி என மிரட்டி வைத்துக்கொள்ளாம், உங்க பம்மாத்து வேலை எல்லாம் திமுகவிடம் நடக்காது. என் அட்ரஸ் தரேன் ஈடிய வர சொல்லு, ஈடிக்குலாம் பயப்பட மாட்டேன், நான் யார் கலைஞர் பேரன்.. மடியில் கணம் இல்லை, வழியில் பயமில்லை, எப்ப வேணும்னாலும் ஈடி வரட்டும் நான் டூர்ல இருப்பன் சொல்லிட்டு வா! முக்கால்வாசி நேரம் எல்லாம் வாட்சப்பில் தான் இருக்கிறீர்கள். நமக்கு எதிர்திசையில் உள்ள அடிமைகள், ஆளுநர் முதல் சங்கிகள் வரை நமக்கு எதிராக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர், திமுகவினர் பொய் செய்தி எது என தெளிவுபடுத்த வேண்டும்.


ஒன்றிய அரசு என்ன செய்ய நினைக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கிறார். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி இப்படி இந்த நாட்டை உருமாற்றம் செய்ய முயற்சிக்கிறார். இதனை முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு என உள்ள பெயரை பாஜக மாற்ற துடிக்கிறது. இந்த நேரம் அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றி இருப்பார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாசிச பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசினார்.