ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நிலங்களை வாங்க வழிவகை செய்யும்படியாக, ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்குவிக்க முதல் முறையாக ரியல் எஸ்டேட் உச்சிமாநாடு ஜம்முவில் நேற்று நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமும், ஒன்றிய வீடு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ரியல் எஸ்டேட் அமைப்புடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது. 



ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, உச்சிமாநாட்டின் போது பேசுகையில், “ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்கும் வகையில், RERA போர்டல், ஹவுசிங் போர்டல், ஒருங்கிணைந்த ஏல போர்டல் என பல போர்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது போன்ற முயற்சிகள் டெவலப்பர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் இருவருக்கும் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒன்-ஸ்டாப் போர்ட்டலாக உதவும்." இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இணையாக ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைவதை விரும்பாத மக்கள் இருப்பதாக சின்ஹா கூறினார். “அவர்களுக்கு நிலம் கொடுக்காமல் தொழில்களும், முதலீடுகள் இல்லாத வளர்ச்சியும் வேண்டும். ஆனால் ஜம்மு காஷ்மீர் வழியில் வரும் அனைத்து தடைகளையும் உடைப்போம்” என்று லெப்டினன்ட் கவர்னர் கூறினார். திட்டங்களின் வளர்ச்சிக்காக 6,000 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும், விவசாய நிலங்களின் நில பயன்பாட்டை மாற்றுவதற்கான விதிகளையும் உருவாக்கியுள்ளது என்றும் சின்ஹா கூறினார். ஒரு புதிய தொழில்துறை திட்டத்தின் கீழ் ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த எண்ணிக்கை ரூ.60,000 கோடியை எட்டும் என்று நம்புவதாகவும் சின்ஹா குறிப்பிட்டார். 



திட்டங்களை மேம்படுத்த புதிய தொழில் கொள்கையின் கீழ் அரசு சொந்த நிலத்தையும் வழங்கும் என்றார். நிலத்தை வைத்திருக்கும் மக்கள் தங்கள் நிலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று சின்ஹா கூறினார். இதில், காஷ்மீரில் வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி விற்பனை செய்ய அரசுடன் 39 ஒப்பந்தங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்துள்ளன. ரூ.18,300 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஹிரானந்தனி குழுமம், சிக்னேச்சர் குளோபல், என்பிசிசி மற்றும் ரஹேஜா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட பல டெவலப்பர்கள் ரூ.18,900 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான நரெட்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் பொருளாதாரம் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அரசின் இந்த நடவடிக்கை மூலம் காஷ்மீரின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.