நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற கட்சி குழு தலைவரும், நெல்லை தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சில தினங்களுக்கு முன் நெல்லைக்கு வந்த முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த நேரத்தில் நான் மாவட்டத்தின் சார்பாக இரண்டு, மூன்று கோரிக்கைகளை வைத்தேன்.


அந்த கோரிக்கை வைத்து நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சர் புறப்படுகிற நேரத்தில் மருத்துவக்கல்லூரி கோரிக்கைகளை வைத்தேன். அப்போது அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் சொல்லவில்லையா என கேட்டார். நான் கூறியிருப்பதாக கூறியினேன். அதன் பின் முதல்வர் கிளம்பிய ஒரு 5 நிமிடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்னை தொடர்பு கொண்டார்.  நீங்கள் முதல்வரிடம் கோரிக்கை அளித்துள்ளீர்கள். நான் ஒரு இரண்டு வாரத்தில் வருகிறேன், அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வைத்து இதற்கான உத்தரவு அனைத்தையும் வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை தந்ததோடு மட்டுமின்றி  அவர் வருகிற தகவலையும், நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற தகவலையும் அவரின் உதவியாளர் என்னை அழைத்து தெரிவித்தார்.


இதை நான் குறிப்பிடுவதற்கு காரணம்,  ஒரு செயலை செய்கின்றபோது எந்த கட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி மட்டுகின்றி அமைச்சர் மற்றும் முதல்வரையும் மனதார, உளமார  பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேசினார். ஏற்கனவே பாஜகவில் சட்டமன்ற குழு தலைவராக இருந்தாலும் கூட நயினார் நாகேந்திரன் பெரிய அளவில் அரசியல் பணி செய்வதில்லை என்ற விமர்சனம் உள்ளது. எனவே அவர் விரைவில் மாற்று கட்சிக்கு செல்லலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் சமீபகாலமாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் நயினார் நாகேந்திரன் தவறாமல் கலந்து கொள்கிறார். குறிப்பாக கடந்த 8 ஆம் தேதி நெல்லை வந்த முதல்வர் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். அதில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திருநெல்வேலி தொகுதிக்கு கலைக்கல்லூரி தந்துள்ளார். முதல்வர் அவருக்கு எனது பாராட்டுகள். ஒவ்வொரு கால கட்டத்திலும் நெல்லை மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர்கள் சரித்திரத்தில் இடம்  இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அதன்படி  அந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இடம் பெற வேண்டும் என்று கூறியதோடு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.




அரசியல் நாகரீகத்தோடு கலந்து கொள்வதாக வைத்து கொண்டாலும், அரசு மேடையில் முதல்வரையும், அரசையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்த வகையில்  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனியில் அரசு சார்பாக நடைபெற்ற விழாவிலும் கலந்து கொண்டு முதல்வர் மற்றும் அமைச்சரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதேசமயம் பாஜக தலைமை தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலையும், அடுத்தடுத்து ஊழல் புகார்களை வெளியிட்டு வரும் சூழலில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சியை புகழும் சம்பவம் அரசியல் விமர்சகர்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


அதேபோல் முதல்வரும் தங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் முன்வைத்த கோரிக்கையை காது கொடுத்து வாங்காத நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனை தொடர்பாக முன் வைத்த கோரிக்கையை சில நாளில் நிறைவேற்றி கொடுத்துள்ளார். எனவே விரைவில் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணையலாம் என நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து நாம் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றோம், ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் விளக்கம் கேட்க இயலவில்லை