நெல்லை மாவட்ட இந்து முன்னணி அலுவலகம் நெல்லை டவுண் மவுண்ட் ரோடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசி வருகிறோம். என்னை பொறுத்தவரை திராவிடமோ அல்லது வேறு எந்த இயக்கமோ என்று இல்லாமல் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும். மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற வேண்டும். இதுதான் ஒரு நல்லாட்சியின் அடையாளம். திராவிட நாடு ஆட்சி என்பது எந்த வகையில் உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கர்நாடக தேர்தலில் பெங்களூர், மங்களூர் உட்பட 4 இடங்களுக்கு சென்று வந்தேன். இந்த 4 இடங்களிலும் பாஜக அமோக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக இந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டம், ஒழுங்கு, பிரச்சினை தொடர்பாக பல காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பதில்லை. திமுக ஆட்சி அமைவதற்கு முன்பே ஆட்சி அமைந்த ஒரு மணி நேரத்தில் மணல் அள்ளிக்கொள்ளலாம், குவாரி நடத்திக்கொள்ளலாம் என திமுகவைச் சேர்ந்த ஒருவர் பேசினார் அதுதான் இப்போது நடக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதி பூங்கா என சொல்ல முடியும். குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டும் பாதுகாப்பு, ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என இருந்தால் எப்படி சமமான ஒரு ஆட்சியாக இது இருக்க முடியும். 12 மணி நேர வேலை மசோதாவை திமுக தான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது. சில தொழிற்சாலைகள் எல்லா வகையிலும் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சில தொழிற்சாலைகளுக்கு மிச்சப்படுத்தும் வகையிலும் தான் உள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார். தமிழக அரசு குறித்து ஆளுனர் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கு உள்ளது. சில விசயங்களை கோடிட்டு காட்டவேண்டியது ஆளுநருக்கு அவசியமானது. அவர் பேசியது சரியாக இருக்குமேயானால் அதனை அரசு ஏற்றுகொள்ள வேண்டியது தானே என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண