சட்ட-ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பாஜக முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விசிக-வின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், எம்பி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஆளூர் ஷாநவாஸ், சிந்தனை செல்வன், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது என்றும், சட்ட ஒழுங்கை சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான சூழலை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் தோல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.



கலந்துகொண்ட கூட்டணி கட்சியினர்


கட்சியினர் மட்டுமின்றி இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin Birthday: இன்று பிறந்தநாள்.. 'தொண்டன் முதல் தலைவன் வரை..' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை..!


காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள், வன்முறை தூண்டப்பட்டு சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றன. திமுக ஆட்சி நடக்கும்போதே கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை தூண்டுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்", என்று பேசினார்.






பாஜக, பாமக இருந்தால் நாங்கள் இருக்க மாட்டோம்


மேலும், பாஜக, பாமக கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று கூறிய அவர், "அகில இந்திய அளவில் பாஜக-வுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறுகிறோம். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது கூட வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன, அதே போல தமிழகத்திலும் தேர்தல் நெருங்கினால் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. என்றென்றால், அந்த முடிவுகள் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தில் இருந்துதான் வருகின்றன. இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் சுட்டிக்காட்டத்தான் நாங்கள் இங்கு கூடியுள்ளோம்", என்றார்.