சேலம் அதிமுக புறநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தலைவாசல் வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "அதிமுகவில் மட்டும்தான் சாமானியனுக்கும் சட்டமன்றத்தில் கேள்வி கேட்கும் உரிமை வழங்கப்படுகிறது. அதிமுகவின் உறுப்பினர் சீட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதிப்பை பெற்று தரும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்கள் தமிழகத்தையும் தாண்டி அனைவராலும் கவணிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கு வித்திட்டவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கினார் என்றார்.



கருணாநிதி நினைவிடம்:


மேலும் கருணாநிதி மறைந்த போது அவரது நினைவிடத்திற்கான கோப்பில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடவே இல்லை. அந்தப் பாவத்தை செய்தது நாம் தான். வருவாய் துறை அமைச்சராக இருந்த நான் தான் அதில் கையெழுத்து போட்டேன். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு திமுக போட்ட வழக்குகள் அனைத்தும் இரவோடு இரவாக திரும்ப பெறசெய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார். 


முதல்வர் வெளிநாட்டுப் பயணம்:


தற்போது அமெரிக்காவிற்கு சென்ற முதலமைச்சருக்கு வேண்டிய முதலீடு கிடைக்காததால் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள சைக்கிள் ஓட்டி செல்கிறார். அப்போது புரட்சித்தலைவரின் பாடலை பாடுகிறார். ஏற்கனவே சிங்கபூர், துபாய் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அதன்மூலம் எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார். எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 



அம்மாவின் ஆன்மா அளித்த தண்டனை:


2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை. அதிமுக தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 118 சட்டமன்ற உறுப்பினர்கள் நமக்கு இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர். அதற்கு 43 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேவை. 1,92,000 வாக்குகள்தான் குறைவு. அதிமுக இதுவரை வெற்றிபெற்று வந்த ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கான காரணத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். துரோகம் செய்தவர்கள் அதிமுக வேட்டியை கட்டமுடியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். இது அம்மாவின் ஆன்மா அளித்த தண்டனை என்றார்.


தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்:


மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு யாரும் கோரிக்கை வைக்காதபோது தானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில் வழங்கினார். காவிரி உரிமை பாதுகாப்பதில் விவசாயியாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு நாள், ஒரு மாதம் தாக்கு பிடிப்பாரா என எல்லோரும் பேசிய போது அவர்களை, நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் செயல் வடிவத்தில் காண்பித்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழகம் முழுவதும் போதைபொருள் புழக்கம் உள்ளதை பொதுச்செயலாளர் கூறியபோது மறுத்தவர்கள் இப்போது உயர்நீதிமன்றமே அதை சுட்டிகாட்டி உள்ளதே முகத்தை எங்கு வைத்துக் கொள்வார்கள். இதற்கெல்லாம் தீர்வு காணவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.