கோவில்பட்டி உள்ள தனியார் கல்லூரி விருந்தினர் மாளிகையில் வைத்து நீட் தேர்வில் 7.5% மதிப்பெண் எடுத்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிக்கு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். 




                                                                      மக்களுக்கு பாதுகாப்பு இல்லை


பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளரிடம்  கூறுகையில்,தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் மோட்டார் சைக்கிளில் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு, ஒரத்தநாட்டில் உள்ள கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது பல மணி நேரம் காக்க வைத்து அழைக்கழிக்கப்பட்டார். திமுக ஆட்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் புகார் கெடுக்க சென்றால் கூட அதனை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. 


                                                                                  காவலர்களுக்கே பாதுகாப்பில்லை


எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் கொடுமை தொடர்ந்து நடக்கிறது. நான் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அரசுக்கு சுட்டிக்காட்டினாலும், சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. நிர்வாக திறனற்ற அரசாக இருப்பத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேபோல் திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன் மருத்துவர் நடத்திய மருத்துவ முகாமில் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழகத்தில் மோசமாக ஆட்சி நடப்பதற்கான சான்று. ஒரு பள்ளியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நபரை தட்டி கேட்ட மாற்றுத்திறனாளியை கடுஞ்சொற்களால் பேசியதை கண்டிக்கிறோம். அருப்புக்கோட்டையில் நடந்த சம்பவம் மக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. 


                                                                                               வேங்கைவயல்


நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி, சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலத்து பூசி இருக்கின்றனர். ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவத்துக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் மீண்டும் இதுபோன்று நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது. மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு, அந்த வீடியோவை வெளியிட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தருவைகுளத்திலிருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் வாடும் மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சிறைபட்டுள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


                                                                                வெள்ளை அறிக்கை


ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்றபோது என்ன முதலீடுகளை கொண்டு வந்தார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டோம். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விஸ்தரிப்பு செய்வதற்கு தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற சென்றுள்ளார். அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.தமிழகத்தில், சைக்கிள் ஜிம் செய்வது பத்திரிக்கையில் வெளியிட்டார்கள்.. ஆனால் அமெரிக்காவிலும், பாட்டு பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டுகின்றார்.. அதற்காகவா வெளிநாட்டிற்கு போனீர்கள் அரசாங்க பணத்தை எப்படி வீணடிக்கிறார் பாருங்கள்... தமிழக முதல்வர் இன்பச் சுற்றுலா போயிருக்கின்றார்


                                                                            தன்மானமுள்ள கட்சி அண்ணா திமுக


அண்ணா திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம் என்று பாஜக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.. அவர் சொல்லி என்ன பண்றது அண்ணா திமுக தலைமையை விமர்சிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.. மானமுள்ள, தன்மானமுள்ள கட்சி அண்ணா திமுக,  அதிகாரத்துக்கு அடிமையாக இருந்தது இல்லை.. அம்மா காலத்திலும் சரி, தலைவர் காலத்திலும் சரி, எங்களுக்கு மரியாதை உள்ளது... அந்த அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுவோம்.  எங்கள் தலைவர் பற்றிய அவதூராக பேசுவது விமர்சனம் செய்வது, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..  இழிவுபடுத்தி பேசியவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. வெற்றி, தோல்வி வேறு, ஆனால் தன்மானம் வேண்டும்.  அப்படித்தான் எங்கள் தலைவர் எங்களை வளர்த்து இருக்கின்றார்கள்.


                                                                                   கால்நடை பூங்கா


ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மாநில நிதி ரூ.1000 கோடியில் சேலத்தில் கட்டினோம். அதனை இந்த ஆட்சியாளர்கள் திறந்து வைக்கவில்லை. கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுகின்றனர். கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் கால்நடை பூங்கா குறித்து  பேசுவதில்லை என்றார்.