Governor RN Ravi : கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்ட நீதிபதிகள்.. சளைக்காமல் பதிலளித்த ஆளுநர் தரப்பு.. காரசார விவாதம்
ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்று தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மூன்றாவது நாளாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்ற நிதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் ஆளும் அரசை சாடுவதும் முதலமைச்சர் ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஆளுநரை சாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
மசோதாக்கள் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதை கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது.
இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார் எனவும் மீதம் 10 மசோதாக்கள் கிடப்பில் கிடப்பதாகவும் தமிழக அரசு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இதை வைத்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மூன்றாவது நாளாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது
நீதிபதிகள்: ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?
சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்? இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
ஆளுநர் தரப்பு: துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?
நீதிபதிகள்: பல்கலை. மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது.
ஆளுநர் தரப்பு: பல்கலை. செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. UGC விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசால் கொண்டு வந்தது
ஆளுநர் தரப்பு: ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது . ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும்.
நீதிபதிகள்: கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்? 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?
அட்டர்னி ஜெனரல்: இல்லை, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்
நீதிபதிகள்: குடியரசுத் தலைவரும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?
நீதிபதிகள்: குடியரசு தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா?
ஆளுநர் தரப்பு: ஒப்புதல் இல்லாமல் குடியரசுத் தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை
நீதிபதிகள்: அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா?
ஆளுநர் தரப்பு: ஆளுநரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல, மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை குடியரசு தலைவருக்கு முடிவுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்று ஆளுநர் தரப்பு பதிலளித்துள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.