கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.


காயத்ரி ரகுராம் டிவீட்:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  ”பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்துள்ளார்.






”அண்ணாமலை ஒரு தரம் குறைந்த நபர்”


இன்று அவசர கதியில் நான் எடுத்த இந்த முடிவுக்கான பெருமை அண்ணாமலையையே சேரும். அவரை பற்றி நான் குறைவாகவே சிந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு தரம் குறைந்த பொய்யர் மற்றும் அதர்மம் நிறைந்த தலைவர். கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி மிகுந்த அன்பையும், மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன். அது ஒரு பெரிய பயணம். மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இந்து தர்மம் அல்ல. அண்ணாமலையின் கீழ் என்னால் தொடர முடியாது, சமூக நீதியையும் எதிர்பார்க்க முடியாது.


பெண்களே பாதுகாப்பாக இருங்கள்:


பெண்களே பாதுகாப்பாக இருங்கள், யாரோ ஒருவர் உங்களை காப்பாற்றுவார் என எதிர்பார்க்காதீர்கள். யாரும் வரமாட்டார்கள், நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள், உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்காதீர்கள். அனைத்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு மோசமான நபர். அதோடு, எனக்கு தொந்தரவு அளிக்கும் வார் ரூம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும், காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.