விடியல் பயணம் – மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,31,92,978 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.


மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து  - Free Bus Scheme 


மகளிர்க்கு இலவச பேருந்து புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மகளிர் இலவச பேருந்து, திட்டம் பார்க்கப்படுகிறது.அவ்வப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சரும் இந்த திட்டம் குறித்து மேடைகளில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டம் மூலம் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைவதாகவும், அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. ஒருபுறம் இலவச பயணம் வேண்டாம் என ஒரு சில பெண்கள் ஆரம்ப காலகட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எவ்வளவு நபர்கள் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


4 கோடி 31 லட்சம் பெண்கள் பயன்


செங்கல்பட்டு மாவட்டத்தில் விடியல் பயணம் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் இது நாள் வரையில் பெண்கள் – 4,27,64,887, திருநங்கைகள் – 42,231, மாற்றுத்திறனாளிகள் – 3,53,947, மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்கள் – 31,913 என மொத்தம் – 4,31,92,978 நபர்கள் பயனடைந்துள்ளனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.


 மாநகரப் பேருந்துகளில் அதிகப்பயணம்


இதில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தரசிகள், உயர் கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து தரப்பு மக்களிடமும் மாநகர பேருந்து மற்றும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பு அடைந்துள்ளது.


 பயன் அடைபவர்கள் யார் யார்?


பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.


 பெண்கள் சொல்வது என்ன ?


இதுகுறித்து கட்டணமில்லா பேருந்து பயணி ஒருவர் கூறுகையில் : ஏழை குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு இத்திட்டத்தை அறிவித்ததன் காரணமாக தினமும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதந்தோறும் பேருந்து செலவிற்காக ரூ.1500/–க்கும் மேல் செலவழித்து வந்த நிலையில், தற்போது போக்குவரத்து செலவான ரூ.1500/–க்கும் மேலான தொகை எனக்கு மிச்சமாகிறது.


இந்த திட்டம் எனக்கும் என்னை போன்று பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனது பயணம் தொடரவும், இதன் மூலம் வருங்காலம் சிறக்கவும் செய்த தமிழக அரசிற்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


பொது போக்குவரத்து பயணங்கள் ஊக்குவிப்பதும், பெண்கள் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.