தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராம ஊராட்சிக்கு  உட்பட்ட சேலம் பிரதான சாலையில் உள்ள  எமக்குட்டியூர் செல்லும் சாலை  சந்திப்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 லட்சம் ரூபாய் செலவில் நவீன குளிர் சாதன வசதியுடன் ஓரடுக்கு பேருந்து நிறுத்த நிழல்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.  இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 



 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 லட்சம் மதிப்பில், உலக அளவில் எந்த பகுதியிலும் இல்லாத அளவில், குளிர் சாதன வசதியுடன், நவீன  பேருந்து நிறுத்தம் தருமபுரியில் அமைக்கப்பட உள்ளது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை பற்றி சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ். அதனை இப்போது வெளியிட முடியாது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். முதல் தளத்துடன் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தமாக இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.

 



 

மேலும் மின் இணைப்புப் பெறாமல், முழுக்க முழுக்க சோலார் வசதியுடன், பராமரிப்பு செலவு இல்லாத, விளம்பர வகையில் வருவாய் ஈர்த்து  சிறப்பாக செயல்படுத்துப்பட உள்ளது. இதனை நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து தொடங்கி உள்ளோம். கொரோனா பேரிடர் காலத்தில் கடந்த  இரண்டாண்டுகள் எதையும் செய்ய முடியவில்லை. தற்போது தொடங்கப்பட்டுள்ள குளிர்சாத வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை, மேட்டூர் மற்றும் அரூர் பகுதியில் தொடங்கப்படும். தொடர்ந்து இதுப் போன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும்.



 

மேலும் தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை அருகே ரயில்வே மேம்பாலம் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி பல்வேறு காரணங்களால், நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அவை எல்லாம் களையபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் முடிவு பெற்று விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எம்பி செந்தில்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துயை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.