தமிழக அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல திமுக அறுவடை தொகுப்பு, பயனில்லாத குருவை தொகுப்பு கொடுத்துவிட்டு பசுமை புரட்சி செய்வதாக விளம்பரம் தேடுவதாக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராக ஓஎஸ் மணியனை அமைப்பு செயலாளராக அறிவித்துள்ளார். அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎஸ்.மணியன் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக அலுவலகத்திற்கு  வருகை தந்தார். அங்கு ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்ததை தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து,  அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல அறுவடை தொகுப்பு எனவும் அனைத்து விவசாயிகளுக்கும் பயனில்லாத குருவை தோப்பு கொடுத்துவிட்டு பசுமைப்புரட்சி செய்கிறோம் என்று திமுக விளம்பரம் செய்வதாக விமர்சித்த அவர் இந்த ஆண்டு விவசாயிகள் குருவை காப்பீடு செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

 



 

 

எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல உள்ளது என்று விமர்சனம் செய்தார். ஓபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், அதிமுகவின் சட்ட விதிகளின்படி  வளர்ச்சி பாதைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாதவர்கள். 1973 முதல் அதிமுக என்றுமே வளர்ச்சிப்பாதையில்தான்  செல்கிறது என்று கூறினார். இதனிடையே நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம், ஓஎஸ்.மணியன் ஆகியோர் புகைப்படங்களில் ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டு இருந்தது. இருந்த போதும் கல்வெட்டில் இருந்து அவர் ஓபிஎஸ் பெயர் மறைக்கப்படாது மீண்டும் இணைக்க வாய்ப்பு இருக்குமோ என அங்கு கூடியிருந்த முணுமுணுத்துச் சென்றனர்.