ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு பின்னர் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உருவானது. சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியாக போட்டியிட்டனர் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் கருத்து காரணமாக அ.தி.மு.க.வினர் கொந்தளித்தனர்.


எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை மோதல்:


இதையடுத்து, பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. பின்னர், எடப்பாடி பழனிசாமி மீதும் அண்ணாமலையும், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமியும் சரமாரியாக விமர்சனங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தன்னைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தார். இது இருவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


குறிப்பாக. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் பல இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.


அழிவை நோக்கிச் செல்கிறார் அண்ணாமலை:


அவர் கூறியிருப்பதாவது, "அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். அண்ணாமலை விரக்தியில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பேசி வருகிறார். அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி.  அ.தி.மு.க. ஒரு மேலாளர். அண்ணாமலை ஒரு கம்பெனியின் மேலாளர். அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க.வைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள்.


எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பா.ஜ.க.வுக்கு என்றுமே பகல் கனவுதான். அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது" என்று கூறியுள்ளார்.


அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்தள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.