தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.


இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.


இபிஎஸ் ஆஜர்:


இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 27) நேரில் ஆஜரானார். அவதூறு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.


இதனிடையே இந்த அவதூறு வழக்கு விசாரணை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இபிஎஸ் மீதான வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,"பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தான் இபிஎஸ் பேசியிருந்தார். அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தோம்."என்று கூறினார்.