புதுச்சேரி மாநில ஐ.என்.டி.யு.சி. முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் திருவுருவப்பட திறப்பு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஐ.என்.டி.யு.சி. தலைவராக இருந்த ரவிச்சந்திரன் தனது வாழ்நாள் முழுவதையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.  சோதனையான காலங்களில் பலர் கட்சியை விட்டு விலகி சென்ற போதிலும் அவர் எங்களோடு இருந்து கட்சிக்காக பாடுபட்டார். காங்கிரஸ் கட்சிக்கும், தொழிற்சங்கத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நிலைத்து நிற்கும்.


புதுச்சேரியில் கிரண்பேடியை 5 ஆண்டு காலம் கவர்னராக போட்டு நம்மை வாட்டி வதைத்தனர். எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் முடக்கினார்கள். இதையெல்லாம் எதிர்த்து நாம் போராடினோம். இதனை பார்த்த பிரதமர் மோடி, முதல்-மந்திரிகள் மாநாட்டில் என்னிடம், நீங்கள் மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்கிறீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். அப்போது நான் அவரிடம், புதுவை மக்கள் ஏற்கும் திட்டத்தை எதிர்க்க மாட்டோம். மக்கள் ஏற்காத திட்டத்தை கண்டிப்பாக எதிர்ப்பேன் என்றேன். பதவி என்பது 2-வது தான். கட்சியின் கொள்கை தான் முதலில் முக்கியம். கட்சி இருந்தால் தான் நாம் இருக்க முடியும். உழைத்தால் தான் கட்சியில் பதவி கிடைக்கும்.




பா.ஜ.க. தனது பணப்பலம், அதிகார பலத்தால் புதுவையில் நம்முடைய ஆட்சியை கலைத்தனர். கடந்த தேர்தலில் நமது கூட்டணிக்கும், அவர்களது கூட்டணிக்கும் வெற்றி வித்தியாசம் 40 ஆயிரம் வாக்குகள் தான். அப்படி இருந்தாலும் நாம் துவண்டு விடவில்லை. மத்திய அரசு தற்போது போன்களை ஒட்டு கேட்கிறது.


கணவன், மனைவி கூட போனில் பேச முடியவில்லை. ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்கிறார்கள். புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு நடந்த போது என்னுடைய செல்போனையும் ஒட்டு கேட்டிருப்பார்கள். இப்படி ஒரு மோசமான ஆட்சி மத்தியில் மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. 147 செல்போன் எண்களை ஒட்டு கேட்க 8 லட்சம் டாலர் விலை கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை வைக்க சொன்னால் அதற்கு மோடி அரசு தயாராக இல்லை.




2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் அதிக தூரமில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வருவார். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. புதுச்சேரியில் தற்போது புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பென்ஷன் கொடுக்கிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதைய கவர்னர் கிரண்பெடி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சி புதுவையில் நடந்து கொண்டிருக்கிறது. எதைப்பற்றியும் முதல்-அமைச்சர் கவலைப்படவில்லை.


மாநில அந்தஸ்து பெறுவதற்காக தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக முதல்-அமைச்சர் கூறினார். இப்போது வாங்க சொல்லுங்கள் பார்ப்போம். கூட்டணி கட்சி தலைவருக்கே தெரியாமல் பா.ஜ.க. வினர் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை நியமிக்கிறார்கள். இது ஒரு ஆட்சியா? இப்படி மக்களுக்கு துரோகம் செய்கின்ற ஆட்சி புதுவையில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் பஞ்சாயத்து தேர்தல் வர உள்ளது. எனவே ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தால் ஐ.என்.டி.யு.சி. முன்வந்து நிற்க வேண்டும் என நாராயணசாமி பேசினார்.