OPS: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. எங்களுடன் பேசி வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


"கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. பேசி வருகிறது”


 சென்னை எழும்பூரில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, அவர்கள் பேசியதாவது, "மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. எங்களுடன் பேசி வருகிறது. வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும். அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. பகைத்துக் கொள்ளவும் வேண்டாம், நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


”தினகரன் நமக்கு துணையாக தோழமையாக செயல்பட உள்ளார். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான அழைப்பு வரும். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை அவர்கள் நமக்கு கற்பித்துவிட்டனர். பழனிசாமி அரசு கவிழக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் நாங்கள் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே கவிழ்ந்திருக்கும்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


”நம்பிக்கை துரோகம் செய்த இபிஎஸ்"


தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதாலேயே ஆதரவு அளித்தோம். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து விட்டனர். கட்சி தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொண்டர்களுகக்கு எம்ஜிஆர் வழங்கிய அடிப்படை உரிமையை பறித்துவிட்டனர். எடப்பாடி பழனிசாமியை தவிர யார் வந்தாலும் இணைத்துக் கொள்வோம்” என்றார்.


திருச்சி மாநாட்டை விட கொங்கு மண்டல மாநாடு சிறப்பாக இருக்க வேண்டும். அது தான் என் வேண்டுகோள். எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற வார்த்தையே இல்லை. ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை அவருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரி இல்லை என மத்திய அரசே சொல்கிறது” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.