சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 


நாங்குநேரி சம்பவம்:


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. பொன்விழா மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிகளவில் மாநாட்டில் கலந்துகொள்ள செய்தல் குறித்து பேசப்பட்டது. நாங்குநேரி மாணவர் வீடு புகுந்து தாக்குதல் குறித்த கேள்விக்கு, இளம் வயதில் கல்வி கற்கும் கல்வி கூடங்களில் சாதி சண்டையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.


மாணவர்கள் நல்லொழுக்கம் கற்கும் இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டு, வீட்டிற்கு சென்று தாக்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


காவிரி நீர்:


காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற அதிமுக ஆட்சியில் நிரந்தர தீர்வுகானும் வகையில் உச்சநீதிமன்றமத்தில் நிரந்தர தீர்ப்பை அதிமுக அரசு பெற்றுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலான்மை ஆணையம், காவிரி நீர் முறைபடுத்தும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாதாமாதம் கூடி தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது. கர்நாடக அரசு வேண்டுமென்றே தொட்டமிட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.


தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை ஈர்ப்பின் அடிப்படையில் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இன்றைய முதலமைச்சர் அதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. ஜூன் மாதம் 12-ம் தேதியே தண்ணீர் தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது என்றும் செய்தி வெளியானது. ஆனால், தண்ணீர் திறந்து விட்டால் போதாது, இறுதிவரை விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தால் தான் விவசாயம் செய்ய முடியும், நெற்பயிர் பாதுகாக்கப்பட்டு விளைச்சல் பெற முடியும். இந்தியாவில் இருக்கின்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து கூட்டத்தை கூட்டினர். 


ஏன் கோரிக்கை வைக்கவில்லை?


அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சில கோரிக்கைகளை வைத்தார். அதேபோல தமிழ்நாடு முதல்வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள, கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை திறந்த விட வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகின்ற பிரச்சனை, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் செயல்பட்டு இருக்க வேண்டும்.


உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க வேண்டும். மாதம் தோறும் கர்நாடக அரசு அணையில் இருந்து தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறந்துவிட வேண்டும். அவ்வாறு திறந்து விட்டால்தான் நாங்கள் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தால், அது நிறைவேறி இருக்கும். ஆனால், ஸ்டாலின் அதுபோன்ற எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர் சிவகுமார் தான் ஸ்டாலினை சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, காவிரி நீரை திறந்துவிட கோரி அவர் அங்கேயே பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.


அக்கறை இல்லை:


கூட்டணி அரசாக உள்ள கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வில்லை. ஆனால், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக கூறுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், எதிர்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தால், எளிதாக தண்ணீரை பெற்றிருக்கலாம். ஆனால், தமிழக மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் முதல்வருக்கு அக்கறை இல்லை. இன்னும் ஒரு பத்து நாள் தான் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு கிடைக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.


இப்போது அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை, ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, அதை பயன்படுத்தி பயிரிட்ட டெல்டா மாவட்ட பயிர்கள் தற்போது கருகி வருகிறது. கருகிய பயிர்களுக்கு இந்த அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும், உங்களுடன் கூட்டணியில் உள்ள கர்நாடக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளபடி தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தண்ணீரை வழங்கவில்லை, அந்த தீர்ப்பை மதிக்கவில்லை. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், இந்த கூட்டணியினால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்றார். 



நீட் தேர்வு:


தொடர்ந்து ஆளுநர் நீட் ரத்து மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறியது குறித்த கேள்விக்கு, திமுக தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களிடம் தெரிவித்தனர். இவர்கள் கையில் நீட்டை நீக்கும் அதிகாரம் உள்ளதை போல மக்களை ஏமாற்றி, பெற்றோர்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வருவதற்காக கவர்ச்சிகரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து மக்களை ஏமாற்றினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று தெரிவித்தனர்.


இவர் கையெழுத்திட்டால் நீட் தேர்வு ரத்தாகுமா, இவரது மகன் உதயநிதியும் முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்துட்டு நீட் தேர்வை ரத்து செய்வார் என்று கூறினார். ஆனால் இன்று வரை செய்யவில்லை. இந்த கேள்வியை செய்தியாளர்கள் முதல்வரிடம் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ரத்து செய்வோம் என்று கூறவில்லை. ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதுதான் திமுக ஆட்சிக்கு முன்னர் ஒரு பேச்சும், ஆட்சிக்கு பின்னர் ஒரு பேச்சும் என்ற நிலை உள்ளது. ஆனால், அதிமுக நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டு திட்டத்தை நிறைவேற்றி, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை கனவை நிறைவேற்றி உள்ளோம்.


நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தை ஒருநாள் திமுகவால் முடக்க முடிந்ததா? ஆனால், காவிரி நீர் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் வகையில் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தோம். தமிழ்நாட்டின் உரிமையை நாங்கள் பாதுகாத்தோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக விவசாயிகளின் உரிமையை காக்க தொடர்ந்து முடக்கி வைத்தோம். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒருநாள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க முடிந்ததா, முதல்வர் ஸ்டாலின் இங்கு ஒன்று பேசுவார், அங்கு ஒன்று பேசுவார் மக்களை ஏமாற்றுவார்.


பதில்தர வேண்டிய அவசியமில்லை:


இனிமேல் திமுகவை மக்கள் நம்பப் போவதில்லை. வடமாவட்டங்களில் பாமக ஆதரவில்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு, அவர்கள் பேசுவதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இப்படி பேசித்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.