சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புறநகர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்களான மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபிறகு புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு, முதல்முறையாக வருகை தந்ததால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்களைத் தூவியும் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர்.

நீர், மோர் பந்தல்கள்: 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளரிகளிடம் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்களை வழங்கி, எவ்வாறு உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட வேண்டும், உறுப்பினர் சேர்க்கையின் போது ஒவ்வொருவரின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. அவை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றையும் அறிவுறுத்தினார்.

அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது. "பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன். அவர் வெளியிட்டும் பார்க்கலாம். கர்நாடக தேர்தல் குறித்து நாளை செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். டிடிவி தினகரன் அதிமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் அவரது சொத்து பட்டியலை வெளியிடட்டும்.

லண்டனில் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதை கண்டுபிடித்து அரசு உடைமையாக்கிட வேண்டும் என்று கூறினார். ஆட்சியில் இருந்தால் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அ.தி.மு.க. வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் வதந்தி பரப்புகிறார்கள். அண்ணாமலை பற்றிய கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. விரக்தியில் விளிம்பில் ஓ.பி.எஸ். பேசி வருகிறார். அவரது கருத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை. முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போது தர்மயுத்தம் என்கிறார். அவரது தர்மயுத்தம் என்ன என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள்.

சசிகலாவை பொருட்படுத்த வேண்டாம்:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை வலுப்படுத்துவோம் என சசிகலா சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. சசிகலா சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியலில் இல்லை என அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழின் அடிப்படையில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவ்வளவு பேர் வெற்றி பெறுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி கிடைத்து அதிமுக வளர்ச்சியில் இருப்பதை பார்த்து இப்போது இதுபோல சொல்லி வருகிறார்.

 

திறமையற்ற அரசாங்கம், பெரியகுளத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. நிகழ்ச்சி நடக்கும்போது உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. முதல்வருக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை. அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். கட்சியில் இருப்பவருக்கு அடிப்படை தன்மை தெரியவேண்டும். அவரைப் பற்றி பேசத் தயாராக இல்லை. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.

ஊழல் நடந்ததா?

முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேளுங்கள் பதில் சொல்லுகிறேன். என்னிடம் அவரைப் பற்றி கேட்க வேண்டாம். டெல்லி மதுபானக் கொள்கை, சிபிஐ பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன். எனக்கு அதைப் பற்றித் தெரியாது. அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் ஊழல் நடைபெறவில்லை. திமுக அரசு வந்ததும் சுற்றி வந்தார்கள். வேறு எதுவும் கிடைக்காத்தால் மருத்துவக் கல்லூரி பிரச்சினையை கிளப்புகிறார்கள் .அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் கட்டடம் கட்டப்பட்டது.

45 சதவீதம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.கட்டுமான முடிவுச் சான்றிதழை அவர்கள்தான் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது இதுகுறித்து கேட்டால் என்னைப் போலவே முதல்வரும் பதில் சொல்லியாக வேண்டும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு முதல்வர் தவறு செய்கிறார். என் மீது பழி சொல்வதற்காக வேண்டும் என்றே அதிகாரிகள் சொல்வதை முதல்வர் கேட்கிறார். எப்படியாவது என் மீது வழக்கு போட வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள்.

நேரலையில் காட்ட மறுப்பு:

எதிர்க்கட்சிகள் கிடைக்கும் தகவல் அடிப்படையில்தான் பேசுகிறோம். சட்டப்பேரவை மசோதா குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநருக்கு மட்டும் காலக்கெடு விதிக்க நினைக்கும் திமுக, சட்டப்பேரவையில் நான் பேசுவதை காட்ட மறுக்கிறார்கள். நாட்டு மக்களின் பிரச்சினையை சொல்கிறோம். எதிர்க்கட்சிகள் சொல்லும் பிரச்சினையை கவனித்து சரி செய்ய வேண்டும. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நான் பேசுவது பத்திரிக்கைகளில் வருகிறது. ஏன் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. அதிமுக பிரதான எதிர்க்கட்சி. ஆனால் நாங்கள் சொல்லும் பிரச்சினையை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வேண்டும் என்றே செய்கிறார்கள். ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியே கிடையாது" என்று கூறினார்.