முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், "மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலோடு சாலையிலே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட போது என் மீதும், தொண்டர்கள் மீதும் திமுக அரசு பொய் வழக்கு தொடுத்தது. திருமங்கலம் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிற போது அமைச்சர் எ.வ.வேலு சென்னைக்கு தான் முக்கியத்துவம் என்கிற வகையில் அவருடைய பதிலும் அமைந்திருந்தது.



 

நான் அமைச்சராக இருந்த பொழுது அந்த சுங்கசாவடியை அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூலமாக தொடர்ந்து வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், அப்போது கப்பலூர் டோல்கேட்டில் உள்ளுர் வாகன உரிமையாளர்களுக்கு விலக்கு பெற்று தரப்பட்டது. தற்போது வாகன உரிமையாளர்களுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை முறை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது குழப்பமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே, தற்போது இந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது வேதனை மன உளைச்சலை அளித்திருக்கிறது.



 

கப்பலூர் டோல்கோட்டை அகற்ற போராடினால் இன்றைய முதலமைச்சர் எங்களை காழ்ப்புணர்வோடு கைது செய்கிறார். இன்றைக்கு மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை சர்வாதிகார போக்குடன் தடுக்க நினைக்கிற இந்த அரசு,  இந்த சுங்கச்சாவடி அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நாடு முழுவதும் 565 சுங்கச்சாவடிகளில், தமிழகத்தில் அமைந்துள்ள 48 சுங்கச்சாவடிகளிலே 27 சுங்க சாவடிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் 1 அன்றும், 21 சுங்கசாவடிகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கப்பலூர் டோல்கேட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றப்படும் என்று  நாடாளுமன்றத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்தார்.



 

அதன்படி, கொடைரோட்டில் உள்ள சுங்கச்சாவடி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி, அருப்புக்கோட்டை ரோடு சுங்கச்சாவடி ஆகியவை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு 60 கிலோ மீட்டருக்குள் உள்ளது. கப்பலூர் டோல்கேட்டிற்கு எதிராக நாளைய தினம் 22ம் தேதி திருமங்கலத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம், டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், அனைத்து சங்கங்களும் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.  கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி எப்படி 505 வாக்குறுதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டதோ அதேபோன்று இந்த வாக்குறுதியும் பறக்கவிட்டார். நாளைய தினம் 22ம்தேதி  நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்து, ஏற்கனவே கொடுத்திருக்கிற ஆதரவை உறுதி செய்து இந்த போராட்டம் வெல்லட்டும். கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றுகிற வரை, அதை ரத்து செய்கிற வரை, அதை மூடுகிற வரை எடப்பாடியார் ஆலோசனை பெற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களை திரட்டி, அதேபோல மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்று கூறினார்.




 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்