சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2020-22 ஆண்டு வரை தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி நகராட்சி, வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், குடிநீர் உயர்மட்டதொட்டி அமைத்தல், நியாயவிலைக் கடை கட்டுதல், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட தொகுதியின் முக்கிய பிரச்சினைகளுக்கான 24 பணிகளை 1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக எடப்பாடி தொகுதிக்குள் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமான முறையில் வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாகமான முறையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.



 


பின்னர் சேலம் மாவட்டம் மேட்டூர் உபரி நீர் திட்டப்பணிகளை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் வெள்ளாளபுரம் ஏரி அருகே நடைபெற்று வரும் நீர் உந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சேலம் மாவட்டம் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 ஏரியை நிரப்பும் நோக்கத்தில் ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை நானே துவக்கி துவக்கிவைத்தேன். ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்து 14 மாத காலம் ஆகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அதனை முழு மூச்சுடன் நிறைவேற்றி தற்போது மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளிலும் நிறப்பிரிக்கலாம்.



சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளும் நிரப்பி இருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அதிமுக காலத்தில் துவக்கி வைத்த காரணத்தினால் திமுகவினர் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மனமில்லாமல் நிறைவேற்றமால் காலத்தை கடத்துவதாக குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால் திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித்து விட்டது" என்றார்.


ஆன்லைன் ரம்மி சூதாட்டம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மனம் இருந்திருந்தால் தமிழக அரசு அதனை தடுத்திருக்கலாம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்க்கு பதிலாக மக்களிடம் கருத்து கேட்பதாக கூறி காலத்தை நீட்டி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. காவல்துறை நினைத்தால் போதை பொருட்களை நிச்சயமாக தடுக்கலாம் ஆனால் செயலற்ற முதலமைச்சர் இருப்பதால் போதைப் பொருட்களை தடுக்க முடியவில்லை என்றார். கலைஞருக்கு பேனா வைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போதைய நிதி நிலைமையைப் பொறுத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து கருத்து கருத்து தெரிவித்தால் வேண்டுமென்றே தேவையில்லாத விமர்சனம் வரும் பொருளாதார நிதி நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.