சீமான் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கே.டி.ராகவன் சர்ச்சை வீடியோ தொடர்பாக அவர் இவ்வாறு கூறினார்.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.


முன்னதாக, கடந்த 30ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் சின்னப் போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ' மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.




அந்தப் பேட்டியில், “ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம். ஒருவர்  தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு  கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது , ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும். ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ , வீடியோவை படம் பிடிப்பது தவறு. அதை ஏன் பார்க்க வேண்டும், அவரா பார்க்க சொன்னார் ? ” என்று பேசினார். கே.டி.ராகவனை ஆதரித்து பேசியதற்கு சீமான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி சீமான் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,   


"பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும்  சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர். இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.


நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாஜசுவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை,கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள்,பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்.




காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள்,ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?. எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்து கொண்டுதானிருக்கிறன என்பதை சீமான் நினைவில் கொள்ளவேண்டும். 


அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத்தாண்டி பொது வாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும். அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வண்டும். இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை. அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது


பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது. 


சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும்  ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு", இவ்வாறு,ஜோதிமணி எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.